மு.க.ஸ்டாலின் வேதனை!
சென்னை, ஏப்.5- மக்கள்தான் தங்களுக்கு முக்கியம் என்றும் கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரிசெய்வீர் என்ற தலைப்பில் தனது முகநூல், டுவிட்டர், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:-
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாம் எல்லாருமே இப்போது தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை. அவரவர் வீடுகளில் தனித்து இருந்தால்தான் கொரோனா வைரசைக் கொல்லவும் முடியும்; வெல்லவும் முடியும்! அதனால்தான் வீடியோ மூலமாக உங்களைச் சந்திக்கிறேன். இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; இந்தியாவுக்கு மட்டுமில்லை; உலகப் பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
சமூகப் பேரிடர்
நாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. சிலர் சொல்வது போல இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை. வெளி நாட்டுப் பயணம் மேற் கொண்டவர்களை மட்டும் பரிசோதனை செய்தால் போதாது; வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காப்பதுதான் சரியானது! இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்.
ஒரே விலை
கிராமப்புறங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக உயர்ந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பல்வேறு வகையான கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் உண்டு என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல வங்கிகள் இம்மாத தவணையை (இ.எம்.ஐ.) வாடிக்கையாளர்களை கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
பாரபட்சம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் நிதியை ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமிநாசினி, முகக்கவசம், பிளச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா? இந்தநோயின் தீவிரத்தைச் சொல்லி தமிழக அரசுதான் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.
கடமை...
முதலில் தமிழக அரசு உணர வேண்டும். ஏதோ சலுகைகள் அறிவித்தோம்; அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்து விடக்கூடாது. ஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதை சரி பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்குச் சொல்வதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது.
அதனால் இந்தத் துயரமான நேரத்தில் மக்களின் உயிரைப் பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்கிறவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி, மத அடிப்படையில நம்மை பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள்! வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டிற்குள்ளேயும் தனித்தனியாக இருங்கள்! அதைக் கடைப்பிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம். இப்போது நமக்குத் தேவை. தனித்திருப்போம்! விழித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.