காவல் துறை விசாரணையில் அம்பலம்
திருப்பூர், மார்ச் 18 – திருப்பூரில் இரு மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்டும் நோக்கில் சொந்த ஆட்களையே கூலிப்படை போல் ஏவிவிட்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் தன்னையே வெட்டிக் காயப்படுத்திக் கொண்டார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்ததுடன் இந்த சதியை அம்பலப்படுத்தி உள்ளனர். திருப்பூர் பெருமாநல்லூர் சாலை கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து (எ) நந்தகோபால் (வயது 50). இவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் கணக்கம்பாளையத்தில் உள்ள தனது எலக்ட்ரிக்கல் கடையைப் பூட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் பகவான் நந்துவின் கைகள் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பந்த் போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இரவோடு இரவாக தகவல் பரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நந்து கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் ஏழு தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் நந்துவை வெட்டியதாக ருத்ரமூர்த்தி (வயது 20) என்பவரை புதன்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில், பகவான் நந்துவின் யோசனைப்படி, பொது மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தவும், இரு மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்டும் நோக்கத்திலும், அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற சுய விளம்பரத்திற்காகவும், துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பெறுவதற்காகவும் பகவான் நந்து தன்னை வெட்டி காயப்படுத்தும்படி கூறியிருக்கிறார். இதையேற்று இந்த சம்பவத்தைச் செய்ததாக திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் ருத்ரமூர்த்தி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பொது மக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே பீதியை ஏற்படுத்தவும், மதக்கலவரத்தைத் தூண்டவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுத்த சதி செய்த அடிப்படையில் பகவான் நந்து மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் கூறியிருக்கிறார்.