tamilnadu

img

ஏப்ரல் 2 முதல் 15 வரை ரூ.1000 விநியோகம்

சென்னை, மார்ச் 27- கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்தத் தொகை குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மாநிலம் முழுவதும் எல்லைகள் மூடப்பட்ட தோடு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது இதனால் ஆயிரம் ரூபாய் எப்போது கிடைக்கும் என்று ஏழை மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை அமலாக்கம் செய்வது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில்,வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்றும்  இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்களும் 15ஆம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருவதை கட்டுப்படுத்த,  தெரு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்றும், யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ரேஷன் கடைகளில்  முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளதுடன், ரொக்கப்பணம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.

வாகன வசதி உள்ள ஊர்களில் வீடு வீடாகச் சென்று தொகை வழங்கலாம் என்றும், அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நிற்பவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்ய வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகளை உரிய முறையில் விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியாளர்களை சாரும் என்றும், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் இந்த பணியை மேற்கொள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.