tamilnadu

img

முதுபெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் காலமானார்

சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி!

தோழர் கே.வைத்தியநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு மற்றும் சிஐடியு, சிபிஎம் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடையளித்தனர்.

சென்னை, ஆக.8- தமிழகத்தின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரும், சிஐடியு மாநில துணைத்தலைவரு மான தோழர். கே.வைத்தியநாதன் சனிக்கிழமை (ஆக.8) இயற்கை எய்தினார், அவருக்கு வயது 97. முதுபெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் கே. வைத்தியநாதன் மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி செலுத்தியுள்ளது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

திருவாரூரில் பிறந்து வளர்ந்த தோழர். கே. வைத்தியநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பயின்ற ஆரம்பப் பள்ளியில் படித்தவர். தனது இளமை பருவத்தில் படிப்பை முடித்து புதுவையில் மதுவிற்பனை கடையில் சில காலம் பணிபுரிந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர். புதுவை வ.சுப்பையா அவர் களுடன் இணைந்து செயல்பட்டவர். 1969ஆம் ஆண்டில் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் சுருட்டுத் தொழிலாளிகள் இயக்கத்தை வளர்ப்பதி லும். நெடுங்காடு பஞ்சாலையில் சங்கத்தை உரு வாக்குவதிலும் வைத்தியநாதன் ஈடுபட்டார். 1973ஆம் ஆண்டில் சிஐடியுவின் தமிழ் மாநில அலுவலகம் மதுரையிலிருந்து செயல்படத் தொடங்கியது. தோழர். ஏ.நல்லசிவன் அவர்களு டன் இணைந்து வைத்தியநாதன் அலுவலக செயலாளராக செயல்பட்டார். மாநில மையப்பணி களை கவனித்துக் கொண்டே அவர் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை தொழிலாளர் போராட்டம், சங்க கிரி சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டம் போன்றவற்றிற்கு உதவினார். 1974 ஆம் ஆண் டின் பிரசித்தி பெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் பொழுது வைத்தியநாதனும், ரயில்வே சங்கத் தலை வர்கள் பலரும் மதுரையில் கைது செய்யப்பட்டு 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1979ஆம் ஆண்டில் தமிழக சிஐடியு சிமெண்ட் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வைத்தியநாதன் அதன் அமைப்பாள ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழுவில் கே.கருணாகரனுடன் வைத்தியநாதனும் உறுப்பினராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.தமிழ்நாடு சர்க்கரைத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக, தமிழ்நாடு பஞ்சா லைத் தொழிலாளர் சம்மேளனத்தின் உதவித் தலைவராக, தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேள னத்தின் தலைவராக, தமிழ்நாடு கைத்தறித் தொழி லாளர் சம்மேளத்தின் உதவித் தலைவராக அவர் பல ஆண்டுக்காலம் செயல்பட்டார். 1972ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிஐடியுவின் தமிழ் மாநில நிர்வாகிகளுள் ஒருவ ராக இருந்து வருகிறார். சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் பல ஆண்டுக்காலம் செயல்பட்டுள்ளார்.

அகில இந்திய பீடித் தொழிலாளர் சம்மேளனத் தின் செயற்குழு உறுப்பினராகவும் அகில இந்திய சர்க்கரைத் தொழிலாளர் சம்மேளனத்தின் உதவித் தலைவராகவும், சர்க்கரைத் தொழிலாளிகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவிலும் அவர் பல வருட காலம் செயல்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மின்சாரம், கூட்டுறவு, கட்டுமானத் தொழிலாளர் சங்கம், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம், டான்சி தொழிலாளர் சங்கம் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு வைத்தியநாதன் பெரிதும் உதவியுள்ளார்.

1991ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி யன்று கோவையில் நடைபெறவிருந்த போனஸ் பேச்சுவார்த்தைக்காக 8ஆம் தேதி இரவில் அவர் கோவை புறப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலை யத்திற்கு பேருந்தில் சென்ற அவர், அதிலிருந்து இறங்கும் பொழுது அவரது இடதுகால் மீது பேருந் தின் பின்சக்கரம் ஏறி பெரும் சேதம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை குணப்படுத்த சிஐடியு மாநில தலைமை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது, ஆனால் அவரால் முன்பு போல் நடக்க இயலவில்லை. சிஐடியு மாநிலக்குழு அலு வலகத்திலேயே தங்கி, சங்கங்களுக்கு வழிகாட்டும் பணிகளை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும் அவதியுற்று வந்த தோழர். வைத்தியநாதன் அவர்களை சிஐடியு கண்ணும் கருத்துமாக கவ னித்துக்கொண்டு வந்தது.

மாநிலக்குழு அலுவலகத்திற்கு வரும் தோழர்களிடம் அவர்களது குடும்பத்தினரை பற்றி விசாரிப்பதும், பரிவு காட்டுவதும், இளம் தோழர் களுக்கு வழிகாட்டுவதுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். தொழிலாளி வர்க்கத்திற் காக திருமணம் செய்யாமல் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தோழர். கே.வைத்தியநாதன் அவர் களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அந்த மகத்தான தலைவருக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வஞ்சலி செலுத்துகிறது. தோழர் கே.வைத்தியநாதன் அவர்களது மறைவுக்கு சிஐடியு செங்கொடி தாழ்த்தி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎம் மாநில செயற்குழு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில், “சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலை வர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றி யவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தோழர் கே. வைத்தியநாதன் இன்று பிற்பகலில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம், வேதனைய டைந்தோம்.  அவருக்கு வயது 98. வைத்தியநாதன் அவர்களது மறைவு சிஐடியு இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

சிஐடியு மாநில நிர்வாகியாகவும், அகில இந்திய நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு. சிகிச்சை பெற்று சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்திலேயே தங்கியிருந்து சங்கங்களுக்கு வழிகாட்டும் பணியை செய்து வந்தார்.  தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தொழில்களில் சங்கம் வைத்து அந்தத் தொழிலாளிகளோடு நெருக்கமாகப் பழகி, தொழிற்சங்க இயக்கத்தை குறிப்பாக சிஐ டியுவை வளர்த்த பெருமை தோழர் கே. வைத்திய நாதனைச் சாரும். மிகவும் எளிமையானவர். கைது, சிறை என பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.  திருமணம் செய்துகொள்ளாமல் இயக்கத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது மறைவால் துயருற்றிருக்கும் தோழர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

என்.சங்கரய்யா இரங்கல்

தோழர் கே.வைத்தியநாதன் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். தொழிற்சங்க இயக் கத்தின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அவர். கட்சி யிலும் தொழிற்சங்கத்திலும் நீண்டகாலம் அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணியாற்றி வந்தவர் தோழர் வைத்தியநாதன். அவரது இழப்பு ஈடுசெய்யமுடி யாத பேரிழப்பு. அவரது தியாக உணர்வையும், அவரது தன்னலமற்ற சேவையையும் நமது தோழர்கள் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள் கிறேன். அவரது மறைவால் துயருற்றிருக்கும் தோழர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தோழர் கே.வைத்தியநாதன் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும், அஞ்சலியும் தெரி வித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில், “மூத்த சிஐடியு தலைவரான கே.வைத்தியநாதன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக தமது 97 ஆவது வயதில் மறை வெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவ ரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் - முன்னேற்றத்திற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றிய போராட்டக் குணமிக்க சிறந்த தொழிற்சங்கவாதியை தொழிலாளி வர்க்கம் இழந்திருப்பது பேரிழப்பா கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தின ருக்கும், சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அஞ்சலி

சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த தோழர் வைத்தியநாதன் உடலுக்கு சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலாளர்கள் கோபிகுமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, க.திருசெல்வன், அலுவலகச் செயலாளர் கே.வி.எஸ்.மணியன், கே.கோபால், வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், பொருளாளர் எம்.வெங்கடேசன், டி.ஆர்.இ.யு. பொருளாளர் சரவணன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் தாமு, இரா.முரளி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டி.எஸ்.ரங்கராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொதுச் செய லாளர் பழனி உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.