சென்னை,அக்.16- ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய வாலிபர் சங்க மாவட்டத் தலைவரை கைது செய்த காவல்துறையின் அராஜகத்திற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முதல் திருவொற்றியூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 100 அடி அகலம் கொண்ட மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு க்கு உள்ளாகி 30 அடியாக சுருங்கியுள்ளது.
எச்.பி.சிஎம் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தாபா ஹோட்டல் உரிமையாளர் ,அமைச்சர் பெஞ்சமினுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சம்பந்தப்பட்ட 100 அடி கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். இத்தகைய ஆக்கிர மிப்பால் அப்பகுதியிலுள்ள திருவேங்கடபுரம் தடபெரும்பாக்கம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்களை திரட்டி ஆக்கிர மிப்பை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் டி.மதன் உள்ளிட்டோர் பொதுமக்க ளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கோட்டாட்சியர் கால்வாயை நேரில் பார்வையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்டோபர் 14 அன்று மீண்டும் கால்வாயை ஆக்கிரமித்து சிமெண்ட் தளம் போடுவதற்கான ஏற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள் வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மீண்டும் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மதன் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
மேலும் ஏற்கனவே கோட்டாட்சியர் பார்வையிட்டு தடுத்து நிறுத்தி யுள்ளதால் அவரிடமே பேசலாம் என்று போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 15 அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மதன் வீட்டிற்கு காவல்துறை சென்று அராஜகமான முறையில் சமூக விரோதியைப் பிடிப்பதைப் போன்று கைது செய்துள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் வார்டு உறுப்பி னர் பாலாஜி என்பவரையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். கைது செய்த இருவர் மீதும் 5 பிரிவுகளில் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பொய் வழக்கை காவல்துறைபதிவு செய்துள்ளது. சட்டத்தை நிலைநாட்ட, சட்டத்திற்குப் புறம்பாக நீர் வழித் தடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பெயரில் போராடியவர்கள் மீது வழக்குப் போட்டுள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து நியாயத்திற்கான போராட்டத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருபோதும் பின்வாங்காது என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
எனவே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் டி.மதன் மற்றும் தடபெரும்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர் பாலாஜி ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள தாபா ஹோட்டல் நிர்வா கத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக காவல்துறையின் இத்தகைய அராஜகமான மனித உரிமை மீறல் நடவடிக்கையை கண்டித்து உடனடியாக அனைத்து மாவட்டக்குழுக் களும் கண்டனக் குரல் எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.