தேனி, ஆக. 19- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதியினர் பாண்டி – மீனா. இவர்களுக்கு வெண்ணிலா(17), அபிஷேக்(15) மற்றும் சாருகேஷ்(12) ஆகிய 3பிள்ளைகள் உள்ளனர். பாண்டி கட்டிட கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர்களில் இரண்டாவது மகனான அபிஷேக் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா நோய் பரவலால் பள்ளி திறக்கப்படாததால் ஆண்டிபட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் அபிஷேக் பங்கேற்று வந்துள்ளார். இதில் இணையதளத்தில் நடத்தப்படும் வகுப்புகள் சரிவர தனக்கு புரியவில்லை என பெற்றோர்களிடம் அபிஷேக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதற்கு சிறுவனின் பெற்றோர் அறிவுரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் கண்டித்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அபிஷேக் நள்ளிரவில் விஷமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார். புதனன்று அதிகாலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அவனது பெற்றோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.