இந்தியாவில், ராபி பருவத்தில் வெங்காயம் உற்பத்தி குறையலாம் என்று கருதி, 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உணவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் மிகப்பெரிய வெங்காய சந்தை, மகாராஷ்டிரா மாநிலத்தின் லாசல்காவனில் உள்ளது. அந்த சந்தையில் தற்போது வெங்காயத்தின் மொத்த விலை (Wholesale prices) 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிலோ வெங்காயம் ரூ.8.50 ஆக இருந்த விலை தற்போது ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதே சில்லறை வர்த்தகத்தில் வெங்காயத்தின் விலை ரூ.20 - 25 ஆக வர்த்தகமாகி வருகிறது. அதே போல் இந்த விலையானது வெங்காய வகைகளை பொறுத்து அதற்கேற்ப வர்த்தகமாகியும் வருகிறது.
மேலும், கடந்த ராபி பருவத்தில் நிலவிய வறட்சியின் காரணமாக, இந்த ஆண்டும் வெங்காயம் உற்பத்தி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெங்காய விலையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெங்காய விலை உயர்வை தடுக்க 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.