ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், தனது வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த அவனின் பெற்றோர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுவன் 15 அடி ஆழத்தில் இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவக் குழுவினர் நிகழ்விடத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.