tamilnadu

ஸ்டெர்லைட் வேண்டாம் என கூறுபவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, மே 22-தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில், அதே கருத்துகொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்?என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டசம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது. இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றியும்4 மாதத்திற்குள்ளாக விசாரணையை முடிக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 14 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. டிசம்பர் 14ஆம் தேதியோடு கால அவகாசம் முடிவடைந்து ஐந்து மாதங்கள் ஆன நிலையி லும் இது தொடர்பாக பெயரைக் குறிப்பிட்டுசிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் கொண்ட ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி பெல் ஹோட்டலில் 22ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை நினைவஞ்சலிகூட்டம் நடத்தவும், அதில் 500 பேர் பங்கேற்கவும்அனுமதி வழங்கினர். இந்நிலையில் தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளரும், துணை ஆட்சியரும் 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின்கீழ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில்ஈடுபட்ட சிலருக்கும் சம்மன் அனுப்பி விசார ணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர். அதேபோல சிலரிடம் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள உறுதிமொழிப்பத்திரத்தை தாக்கல் செய்யு மாறும் தெரிவித்துள்ளனர்.இதுபோல சம்மன் அனுப்பி பொதுமக்களை தொந்தரவு செய்தது சட்டவிரோதமானது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது 107மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுப்பப் பட்ட சம்மன்களை மீது தொடர் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கின் மீதான விசாரணை நீதி பதிகள் சுந்தர், ஹேமலதா ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், சட்டவிரோத கைதுநடவடிக்கைகளை நிறுத்துங்கள், போராட்டம் அடிப்படை உரிமை. ஸ்டெர்லைட் ஆலைவேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்துகொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின்நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என்று கேள்வி எழுப்பினர்.மேலும் நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது என்றும் இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

;