சென்னை,மார்ச் 21- மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் திங்களன்று (மார்ச் 21) தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுத்த சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் , “கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அடிப்படை யில், இந்த தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் முன்மொழிந்தார். அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, தீர்மா னத்தை ஒருமனதாக நிறைவேற்ற அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்”என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “மேக தாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக் கொள்ள மாட்டோம்” என்றார். நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரி விப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கை களிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதி யாக நடவடிக்கை எடுக்கும். இதில் எந்தவித பாகுபாட்டிற்கும் இடமில்லை என்றும் அவர் கூறினார். மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை அனை த்து வடிவிலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். காவிரியில் தமிழகத்தின் உரிமையையும், தமிழக உழவர்களின் நலனையும் திமுக அரசு நிச்சயம் பாதுகாக்கும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றார்.