tamilnadu

img

வைரத்தூண்களில் ஒன்றை இழந்தோம் தோழர் இ.எம்.ஜோசப்புக்கு மதுரையில் பிரியாவிடை

மதுரை, ஜூலை 1 - எல்ஐசி நிறுவனம் பொதுத்துறையாக நீடிக்க  வேண்டுமென்பதிலும், அதில் பணியாற்றும்  ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென் பதிலும் உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி யவர் தோழர் இ.எம்.ஜோசப் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ் சலி செலுத்தினார். எல்ஐசி தொழிற்சங்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து தொழிற்சங்கப் பணியையும் கட்சிப் பணியையும் தனது இரு கண்ணாக பாவித்த தோழர். இ.எம்.ஜோசப் ஞாயிறன்று மதுரையில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி திங்களன்று பகல் 11 மணியளவில் நடைபெற்றது. தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பின் தலைவர் குன்னிகிருஷ்ணன் தலைமையில் இ.எம்.ஜோசப் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஜோசப் உடலுக்கு மலரஞ்சலி செலுத்திய பின், இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:- 37 ஆண்டுகள் காப்பீட்டுக்கழக ஊழியர் பணி, ஓய்வுபெற்ற பின் 15 ஆண்டுகள் தொழிற் சங்கப்பணி, கட்சிப் பணி என கடைசிவரை இடது சாரி இயக்கத்திற்காகவும், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்களின் நலன்களுக்காகவும் உழைத்தவர் இ.எம்.ஜோசப். அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார். இதன் மூலம் ஜோசப்பின் அளப்பரிய பணிகளை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். பிஎஸ்என்எல், வங்கித்துறைகளை தனியார்மயப்படுத்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். அதற்கெதிராக அந்த ஊழியர்கள் இன்றைக்கும் போராடிவருகிறார்கள். ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை நெருக்கடிக் குள்ளாக்கி அதை தனியார்மயப்படுத்த மத்திய  ஆட்சியாளர்கள் முயன்றபோது நாடு முழுவதும் இதற்கெதிராகப் போராடியது ஏஐஐஇஏ. தமிழகத்தில் குறிப்பாக மதுரையில், இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர் இ.எம்.ஜோசப். ஆயுள் காப்பீட்டுக்கழகம் பொதுத்துறையாக நீடிப்பதற்கு ஏஐஐஇஏ-வும்  ஜோசப் போன்ற தலைவர்களுமே காரணம். அவர் தொழிற்சங்கவாதி மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர். பல்வேறு கட்டுரைகளை அவர் தீக்கதிரில் எழுதியுள்ளார். தொழிற்சங்கம் சமூகப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும். குறிப்பாக பெண்களை அணிதிரட்ட வேண்டுமென்பதில் ஏஐஐஇஏ முனைப்போடு உள்ளது. அந்தப் பணியையும் திறம்படச் செய்தவர் இ.எம்.ஜோசப். அவரின் அரசியல் பணியும், சமூகப் பணியும் மறுக்க முடியாதது. மறக்க முடியாதது. அவர் விட்டுச் சென்ற பணியை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

வைரத்தூண்
தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தனது அஞ்சலி உரையில், வைரத்தூண்களில் ஒன்றை தீக்கதிர் இழந்து விட்டது. காப்பீட்டுக்கழக ஊழியர்களையும் தீக்கதிரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தோழர்கள் டேவிட், காஸ்யபன், எம்.எஸ். அருள்தாஸ் போன்றவர்கள் பணிக்காலத் தில் பணி நேரம் முடிந்தபின் தீக்கதிரில் பணியாற்றியுள்ளனர். அந்த அர்ப்பணிப்பா ளர்களின் வரிசையில் இ.எம்.ஜோசப்பும் இடம் பெற்றுள்ளார். மார்க்சியத்தின் மீதான அவரது உறுதியைத் தொடர்ந்து முன்னெடுப்போம். அவர் விட்டுச் சென்ற பணியை தீக்கதிர் தொடருமென்றார்.
புகழஞ்சலி
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் அமானுல்லாகான், இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன், கோட்ட தலைவர்கள் ஜி.மீனாட்சி சுந்தரம், முத்துக்குமாரசாமி, எல்ஐசி பென்சனர் அசோசியேசன் சங்கத் தலைவர் ஆறுமுகம், துரை. எழில்விழியன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மூத்த தலைவர் என்.நன்மாறன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், திமுக சார்பில் முத்து போர்க்கினியன், ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி கு.ஜக்கையன், ஜோசப்பின் சகோதரி ஸ்ரீபுஷ்பம்,  சகோதரர் ஆட்ரின் ஆகியோர் தோழர் இ.எம்.ஜோசப்பின் இடையறாத பணிகள் குறித்து நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் 
தோழர் ஜோசப் மறைவுச் செய்தி அறிந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா. சோ.மோகனா, பொதுச் செயலாளர் அ.அமலராஜன் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்க டேசன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.