tamilnadu

img

தண்ணீர் பழம்

கோடை காலம் முடிந்தது. பாதைகளிலும், பாதை ஓரங்களிலும், நின்று கொண்டிருந்த மரங்களின் இலைகளில் செம்மண்புழுதி படிந்திருந்தது. கிராமப்புறத்திலிருந்து நகரத்தை நோக்கி பதினாறு காளை மாட்டு வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு ரயில் ஊர்ந்து போவதைப் போலத் தெரிந்தது. அனைத்து வண்டிகளிலும் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட தண்ணீர்ப்பழங்கள் நிறைந்திருந்தன. வண்டிக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். காளை மாடுகள் பழக்கம் காரணமாக பாதையிலேயே போய்க் கொண்டிருந்தன.

உச்சிப்பொழுது வந்தது. பாதைக்கு அருகில் நிழல் தரும் மரங்களும், ஒரு கிணறும், ஒரு சுமை தாங்கியும், இருந்தன. வண்டிகள் தானாகவே நின்று விட்டன. வண்டிக்காரர்கள் மாட்டுவண்டியின் நுகத்தைக் கழற்றி மாடுகளை அவிழ்த்து விட்டனர். அவை சற்று இளைப்பாறட்டும். கல் தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. சில காளைகள் அந்தத் தண்ணீரைக் குடித்தன. சில காளைகள் பச்சைப்புற்களை கடித்துப் பார்த்தன. வேறு சில காளைகள் சும்மா நின்று கொண்டிருந்தன. வண்டிக்காரர்கள் வேடிக்கை பேச்சுகளைப் பேசிக் கொண்டும் புகைத்துக் கொண்டும் ஓய்வெடுத்தனர். சற்று நேரம் கழிந்தபிறகு, இரண்டோ, மூன்றோ, தண்ணீர்ப்பழங்களை வெட்டி அவர்கள் பங்கு பிரித்துச் சாப்பிட்டனர். தாகமும் களைப்பும் தீர்ந்து விட்டது. அப்போது அங்கே வயதான ஒரு வழிப்ப்போக்கர் வந்தார். அவர் புழுதி படிந்த பழைய ஆடையை உடுத்தியிருந்தார். கம்பை ஊன்றியே நடந்து வந்தார். பாவம். மிகவும் களைத்துப் போயிருந்தார்.

“ மக்களே! ஒரு துண்டு இந்தத் தாத்தாவுக்குக் கொடுங்களேன்..நாக்கும் தொண்டையும் வறண்டு போய் விட்டது.. நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறேன்..” என்று சொன்ன தாத்தா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“ இது எங்களுக்கே போதவில்லை.. அப்புறம் எப்படி உங்களுக்குக் கொடுக்க முடியும்? எங்களுடைய முதலாளி கணக்காக எண்ணிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.. ஒன்று குறைந்தாலும் பதில் சொல்ல வேண்டும்.. வழியில் சாப்பிடுவதற்குக் கொடுத்தது நான்கு மட்டும் தான்.. உங்களையும் எப்படிக் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியும்? “ “ ஒரு சிறிய துண்டு போதும்..” “ இல்லை என்று சொல்லி விட்டோமே..”

ஒரு ஆள் முறைத்துப் பார்த்துக் கொண்டு சத்தமாய்க் கத்தினான், “ என்ன? என்ன? இந்தா.. நான்.. வாரேன்.. “ தாத்தா தன் கையிலிருந்த கம்பை வைத்து மண்ணைக் குத்தி குழியாக்கினார். கல் தொட்டிய்லிருந்து தண்ணீரைக் கோரி ஊற்றினார். வண்டிக்காரர்கள் தூக்கியெறிந்த பழத்தொலியை நட்டு வைத்தார். இதை எல்லாம் வண்டிக்காரர்கள் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். “ இப்போது பாருங்கள் “ என்ற மாதிரி வழிப்போக்கர் அவர்களைப் பார்த்தார். என்ன அற்புதம்! மாயாஜாலம் போல தண்ணீர்ப்பழம் முளைத்தது. இலைகள் விரிந்தன. பூவும் காயும் நிறைந்தன. தண்ணீர்ப்பழம் பக்குவமாகப் பழுத்தது. தாத்தா அதில் ஒன்றைப் பறித்துச் சாப்பிட்டார். பிறகு வண்டிக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தாராளமாகப் பறித்துக் கொடுத்தார். எல்லோரும் வசியத்துக்கு ஆட்பட்டவர்களைப் போலச் சாப்பிட்டனர். “ நான் போய் வருகிறேன்.. மக்களே! “ என்று தாத்தா விடைபெற்றார். வண்டிக்காரர்கள் பொம்மைகளைப் போல நின்றார்கள். பிறகு பயணத்துக்குத் தயாரானார்கள். காளைகளை வண்டியில் பூட்டினார்கள். அவர்களும் ஏறினார்கள். அடக் கஷ்டமே! ஒரு வண்டியிலும் ஒரு தண்ணீர்ப்பழம் கூட இல்லை. மரத்தடியில் தாத்தா நட்டு வளர்த்த தண்ணீர்ப்பழச்செடியும் அங்கே இல்லை.