டெல்டா பாசனத்திற்கு கல்லணையிலிருந்து தண்ணீர்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர், ஜுன் 16- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஞாயிறன்று, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக, கடந்த 12.06.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததைத் தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து உப ஆறுகளிலும் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில், காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர், வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர், கல்லணைக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர்பங்கீடு செய்யப்படுகிறது. மேலும், கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீர் தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும். கல்லணை தலைப்பில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யவும், சம்பா சாகுபடிக்கான தொடக்கப் பணிகளை செய்யவும், சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறவுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும். பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற விவசாயிகளை முதல்வர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணை சுற்றுலா மாளிகையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஆகியோருடன் ஆய்வு நடத்தியபோது, டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள் குறித்தும், சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.கல்யாணசுந்தரம், ச.முரசொலி, தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், நா.அசோக்குமார், நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.