(கோவி.பால.முருகு)
எத்தனை தோல்விகள் வந்தா லென்ன?
எதிர்த்து நின்று வெல்வாய் கண்ணே!
அத்தனை தோல்வியும் வெற்றிப் படிகள்
அதன்மேல் நிற்பதே ஆற்றலின் பிடிகள்!
தோல்விகள் இல்லா வாழ்க்கை இல்லை
தோல்விகள் தொடர்ந்து வருவ தில்லை!
கால்களும் கைகளும் அறிவு கொண்டு
களத்தில் நின்றால் வெற்றி யுண்டு!
தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன?
திகட்டிட வாழ்வை இழப்பதா கண்ணே!
பெற்றோர் மற்றோர் அறிவுரை நன்று
பெற்ற துன்பம் போக்கிடும் ஒன்று!
மனதில் உறுதி இழந்த கோழை
மாயும் எண்ணம் மாற்றா ஏழை!
கனவில் கூடக் கலங்கி டாதே
காலம் மாறும் தயங்கி டாதே!
மனதில் உறுதி கொண்டிடு என்றும்
மாய்ந்து ஓடும் துன்பம் குன்றும்!
தனக்கென வாழ்தலால் வந்திடும் சரிவு
தரணியில் பொதுநலம் தருவதோ துணிவு!
வீழ்வது வாழ்வில் எழுந்து நிற்கவே
வீழ்ச்சியை எழுச்சியாய் ஆக்கிச் சிறக்கவே!
சூழ்ந்திடும் துன்பம் சுக்கு நூறாம்
சூடிடும் பரிசோ வெற்றியின் வேராம்!