பெரியகங்கணாங்குப்பத்தை மாநகராட்சியோடு இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கடலூர், ஜூன் 9- பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி மன்றத்தை மாநகராட்சியோடு இணைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் மற்றும் சின்ன கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், பெரிய கங்கணாங் குப்பம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகங்கணாங்குப்பம், குமந்தான் மேடு ஆகிய கிராமங்கள் உள்ளடக்கிய பகுதி யில் வசிக்கும் பெரும்பகுதி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வரு கின்றனர். விவசாயக் கூலிகளாக வாழ்க்கையை நடத்தி வரும் இந்த மக்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தனர். 100 நாள் வேலை நிறுத்தம் இந்நிலையில், ஊராட்சியை கடலூர் மாநகராட்சியுடன் இணைக்க போவதாக கூறி கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலையை நிறுத்தி வைத்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஜூன் 9) தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய மக்கள், தங்களுடைய ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டையையும் அரசுக்கு ஒப்படைக்க விரும்புவதாக தெரிவித்தனர். மேலும், ஊராட்சியை கடலூர் மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது, 100 நாள் வேலை திட்டத்தை அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.