tamilnadu

img

ஒன்றிய-மாநில உறவுகள் : இருவேறு கருத்தோட்டம் - மதுக்கூர் இராமலிங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கண்ணூரில் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நடைபெறும் மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஒன்றிய பாஜக கூட்டணி அரசினால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கருத்தரங்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மாநில சுயாட்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளன. உலகிலேயே ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் மாநில அரசு என்ற பெருமை தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான அரசுக்கு உண்டு. புதிதாக அமைக்கப்பட்ட கேரள மாநிலத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1957 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தோழர் இ.எம்.எஸ் முதல்வரானார். ஆனால் 1959ஆம் ஆண்டு மத்திய அரசு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு எனும் கொடு வாளைப் பயன்படுத்தி இ.எம்.எஸ் அரசைக் கலைத்தது. இதேபோல கலைஞர் தலைமையிலான திமுக அரசு மத்திய அரசினால் இரண்டு முறை கலைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒன்றிய அரசின் எதேச்சதிகரமான போக்கை எதிர்த்து கேரளமும் தமிழகமும் தொடர்ந்து போராடி வந்துள்ளன. இந்தப் பின்னணியில் கேரளத்தில் நடைபெறும் மாநில சுயாட்சிக் கருத்தரங்கம் கூட்டாட்சியை வலுப்படுத்த புதிய வெளிச்சத்தை தரும் என்பது திண்ணம். விடுதலை பெறும் இந்தியாவில் மொழிவழியில்தான் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. 1938ஆம் ஆண்டிலேயே மொழிவழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். நாடு விடுதலை பெற்றபிறகு மொழிவழி மாநிலங்கள் அமைக்க மறுத்து காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு குறுக்குச்சால் ஓட்டியபோது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். மொழிவழி மாநிலம் என்பதில் முன்பின் முரணின்றி நின்றவர்கள் நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

மொழிவழி மாநிலக் கோரிக்கைகளான தமிழ்நாடு, கர்நாடக ஏகிகரண சளுபளி நவகேரளம், விசால ஆந்திரா, சம்யுக்த மகாராஷ்ட்ரா என குரல் எழுந்தபோது அதை முழுமையாக ஆதரித்தவர்கள் பின்னணியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர்சூட்ட வேண்டுமென 1961ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோழர் பி.ராமமூர்த்தி சட்டதிருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். இந்த மசோதா  விவாதத்திற்கு வந்தபோது பி.ராமமூர்த்தி சிறையிலிருந்ததால் வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பூபேஷ்குப்தா இந்த சட்டத்திருத்தத்தை ஆதரித்துப் பேசினார். அறிஞர் அண்ணாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப பேசினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த காங்கிரசை சேர்ந்த தியாகி சங்கரலிங்கனாரின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். 1967ல் அண்ணா முதல்வரான பிறகுதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது என்பது வரலாறு.

இன்றைக்கு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்துள்ளது. இது இயல்பாக நடக்கும் ஒன்றல்ல. பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியலையே மோடி அரசு நடைமுறைப்படுத்துகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மாநில சுயாட்சிக்காகவும் மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் இடையறாது போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.  ஏனெனில் தேசியம் குறித்த வரையறையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பொதுவுடைமை இயக்கத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. கம்யூனிஸ்ட் இயக்கம் முன்வைப்பது பன்முக தேசியம். பாஜக முன்வைப்பது கலாச்சார தேசியம். இந்தியா என்கிற கட்டமைப்பிற்குள்  பல்வேறு தேசிய இனங்களின் மொழியுரிமை, பண்பாட்டு உரிமை, வாழ்வுரிமை, பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலமே ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்பது கம்யூனிஸ்டுகளின் கருத்தோட்டம்.

மாறாக ஒரே நாடு. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று ஒற்றைத்துவத்தை திணிப்பது பாஜகவின் செயல்திட்டம். இதன் தொடர்ச்சியாகவே ஒரே தேர்தல், ஒரே தேர்வு முறை, ஒரே பத்திரப்பதிவு என்றெல்லாம் அவர்கள் நீட்டி முழக்கிக் கொண்டு போகிறார்கள். மதச்சார்பின்மை என்கிற வார்த்தை அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. கூட்டாட்சி தத்துவம் என்பதை குழிதோண்டிப் புதைத்து அந்த இடத்தில் அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட  எதேச்சதிகார அரசை நட்டு வைப்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டம்.  மொழிவழி மாநிலங்கள் அமைக்கக்கூடாது என்று அன்றே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். “சுயாட்சி உரிமையுள்ள மொழிவழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இதற்கு பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய வட்டங்களில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ‘ஜனபாத அமைப்புகள்’, இப்போது உள்ள மாநில அரசுகளை விட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்” என்றார் அவர்.

ஜனசங்கத்தின் பொதுச் செயலாளரான தீனதயாள் உபாத்யாயா, “இந்தியாவின் மாநில எல்லைகளை முற்றாக அழித்துவிட்டு நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ‘ஜனபாத அமைப்பை, உருவாக்க வேண்டும். அவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட ஜனபாத அமைப்புகளை உருவாக்கி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மொழிவழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். ஜனசங்கம் தன்னுடைய தேர்தல் அறிக்கைகளில் இதை தொடர்ந்து கூறிவந்தது.  பஞ்சாபி மொழியை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது “ஆரிய நாகரிகத்தின் தொட்டிலான மகா பஞ்சாப் மாநிலத்தை அமைக்க பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைத்து ஒரே மாநிலமாக்க வேண்டும்” என்றது அன்றைய ஜனசங்கம். 

ஜனசங்கம் சொன்னதைத்தான் இன்றைய அதன் வடிவமான பாஜக செய்து வருகிறது என்பது தெளிவு. அதுமட்டுமின்றி, சிறுபான்மை மக்கள் மீதான அவர்களது வன்மத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்மு­ காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக உடைத்து மாநில அந்தஸ்தைப் பறித்துள்ளனர். இதையே விடுதலைத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்றும் கூறத் துணிந்துவிட்டனர்.  சமஸ்கிருதமே தேவபாஷை. அதுவே உயர்ந்தது என்கிற சனாதனக் கருத்தோட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் பல்வேறு மொழிகளை அவர்கள் அவமதிக்கிறார்கள். மொழிகளின் சமத்துவத்தைக் காலில் போட்டு மிதிக்கிறார்கள். இந்தி மொழி மீதான அவர்களது பற்றுகூட இடைக்கால ஏற்பாடுதான். சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று கருதும் அவர்கள், அதுவரை இந்தி கொஞ்சம் குந்திக்கொள்ளட்டும் என்று தாராளம் காட்டுகிறார்கள். 

மறுபுறத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘கட்சித் திட்டத்தில் கீழ்க்கண்டவாறு  முன்மொழிகிறது. “இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உண்மையான சுயாட்சியும், சமமான அதிகாரமும் வழங்கப்படும். பழங்குடி மக்கள் வாழும் பகுதி அல்லது ஒத்த சமூக மற்றும் பண்பாட்டு முறையைப் பின்பற்றும் குறிப்பிட்ட இன மக்கள் தொடர்ச்சியாகவும், வரையறுக்கப்பட்ட பகுதிகளிலும் வாழ்ந்தால் அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அமைப்புக்குட்பட்ட பிரதேச சுயாட்சி வழங்கப்படும், அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முழு உதவி செய்யப்படும்” (கட்சித் திட்டம் 6.3.ஐஐ)  ‘கட்சித் திட்டம்’ மேலும் கூறுகிறது. “நாடாளுமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுபினர்கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு மற்ற அனைத்து மொழிகளிலும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கிவிட்டு இந்தி மொழியை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத்தப்படமாட்டாது” (கட்சித் திட்டம் 6.3.ஐஏ) 

தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகளின் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதோடு வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகக் கூறியுள்ளது.  அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு பலவீனமான மாநில அரசுகள் என்பதே ஆர்எஸ்எஸ் / பாஜக கருத்தோட்டம். மாறாக அனைத்து பகுதி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை பாதுகாத்து வளர்த்தெடுக்க சமமான வாய்ப்பு அதனடிப்படையில் இந்திய ஒருமைப்பாடு என்பதே கம்யூனிஸ்டுகளின் கருத்தோட்டம். இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம் என்பது ஒன்றிய- மாநில உறவுகள் விஷயத்திலும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவின் பன்மைத்துவத்தை பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் களத்தில் நிற்கிறார்கள். ஒற்றைத்துவத்தை திணிக்க சனாதனவாதிகள் துடிக்கிறார்கள். இந்த யுத்தத்தில் பன்மைத்துவமே வெற்றிபெறும். ஏனெனில் வம்படியான திணிப்புகள் வரலாற்றில் ஒருபோதும் வெற்றிபெற்றதில்லை.