tamilnadu

img

சாவித்ரிபாய் புலே பெயரிலான கல்வி உதவித்தொகையை வழங்காத ஒன்றிய அரசு

சென்னை,அக்.17-  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை-சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் புலே பெயரிலான கல்வி உதவித்தொகையை வழங்காத ஒன்றிய பாஜக அரசுக்கு கனிமொழி எம்.பி.,கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது  எக்ஸ் வலைதளப் பதிவில், இத்திட்டத்தில் யுஜிசியால் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.  இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளனர்.  2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிச்சயமற்றத்தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைக்கிறது. பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.  நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.