tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கு சிபிஐ வழக்கறிஞர் ஆஜர் ஆகாததால் ஒத்திவைப்பு

மதுரை, ஜூன் 26 -  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மத்திய புலனாய்வுப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால  அவகாசம் கோரிய வழக்கில், சிபிஐ வழக் கறிஞர் ஆஜர் ஆகாததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவு  இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டது.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப் பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  அதனடிப்படையில் அக்டோபர் 8 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவ ணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவ ணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களி டம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கினை (ஜுன் 27) வியாழனன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.