திருச்சி சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகடாமி அசத்தல்
சர்வதேச ரோல்பால் சாம்பியன்ஷிப்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 1- சர்வதேச அளவிலான ரோல்பால் (ரோல்பால் என்பது ஸ்கேட்டிங், பாஸ்கெட்பால், ஹேண்ட் பால் மற்றும் த்ரோபால் போன்ற பல விளையாட்டுகளின் கலவை யாகும்) சாம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மே 27ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதிவரை 4 நாட்கள் நடைபெற்றன. மினி, சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 4 பிரிவு களில் நடைபெற்ற இப்போட்டியில் தலைசிறந்த அணிகளாக கருதப்படும் இந்தியா, துபாய், இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கலந்துகொண்டன. தென்னிந்திய ரோல்பால் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், மாநில பொருளாளர் ராஜசேகர், சர்வதேச நடுவர் பிரேம்நாத், இந்திய அணி மேலாளர் பிரவேஷிகா ஆகியோர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. சீனியர் பிரிவில் இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில், திருச்சி சாய்ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகடாமியில் பயிற்சி பெற்ற ஹரிஷ்குமார், பிரித்விராஜ் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி 8 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜூனியர் மற்றும் மினி பிரிவில் திருச்சி சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகடாமியை சேர்ந்த விஜயபாஸ்கர், துருவன்ரங்கன் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு, திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய் ஜி ரோல்பால் ஸ்கேட்டிங் மைதானத்தில் பாராட்டுவிழா நடை பெற்றது. விழாவில் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷன் துணைத்தலைவர் சரவணன், செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், சாய் ஜி ரோல்பால் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் மதுனிதா, பொருளாளர் காயத்ரி, சாய் ஜி தலைமை பயிற்சியாளர்கள் சிவக்குமார், லோகநாதன், திருநாவுக்கரசு, அருண் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.