tamilnadu

நூல் கொள்முதலில் வெளிப்படைத் தன்மை: பொது நூலக இயக்ககம் விளக்கம்

நூல் கொள்முதலில் வெளிப்படைத் தன்மை:  பொது நூலக இயக்ககம் விளக்கம்

புதிய புத்தகம் பேசுது இதழின் தலையங்கம், 12.05.2025 தீக்கதிர் நாளிதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நூலகத் துறையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சாதனைகளை வெகுவாகப் பாராட்டியுள்ள அத்தலையங்கம், நூல்கள் கொள்முதல் தொடர்பாக சில கருத்துக்களை கூறியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூல் கொள்முதல் கொள்கை பற்றி விளக்கியுள்ளது.  புத்தக கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக அரசு உருவாக்கியுள்ள கொள்கையின்படி, பொது நூலகங்களுக்கு நூல் கொள்முதல் செய்வதற்காக ஒரு பிரத்யேக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; இந்த இணையதளம் வாயிலாக, அவ்வப்பொழுது வெளியிடப்படும் ஐஎஸ்பிஎன் பதிவு எண் கொண்ட நூல்கள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம், பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  பொது நூலகத் துறையின் வரலாற்றில் முதன் முறையாக, அந்தந்த நூலக வாசகர்களே நூல்களை தேர்வு செய்யும் வகையில் வெளிப்படையான புத்தக கொள்முதல் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதை எந்த மாநில அரசும் செயல்படுத்தியது இல்லை. இதன்மூலம் தரமற்ற, தேவையில்லாத புத்தகங்கள் பொது நூலகங்களுக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் மாதிரி படிகள் பெறப்பட்டு வருகின்றன. இன்னம் 2 நாட்களில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான நூல் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்படவும் உள்ளன. மேலும், முந்தைய ஆட்சியில் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு அதிகமாக நூல்களை கொள்முதல் செய்ததால், சுமார் ரூ.113 கோடிக்கு மேல் இருந்த நிலுவைத் தொகையும், பதிப்பாளர்கள் நலன் கருதி இந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய புதிய நூல் கொள்முதலில் நடைமுறைச் சிக்கல் ஏதும் இருப்பின், அதை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என்று பொது நூலக இயக்ககம் தெரிவித்துள்ளது.