tamilnadu

img

சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டண உயர்வுக்கு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு....

மதுரை:
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில்உள்ள 14 சுங்கச் சாவடிகளில் டோல் கட்டணம் 7 முதல் 10 சதவிகித உயர்வு என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அறிவிப்புக்கு தொழில் வணிகத் துறை சார்பில் தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டோல் கட்டண வருடாந்திர உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொழில் வணிகத் துறை சார்பில்அதன் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தேசிய நெடுஞ்சாலைத்துறை ( NHAI), தமிழ்நாட்டின் 14 டோல் பிளாசாக்களில் உபயோகிப்பாளர் வாகனக் கட்டணம் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 7 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது. 48 சுங்கச் சாவடிகளில் 26 சுங்கச் சாவடிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதியும், மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதியும், ஒவ்வொரு ஆண்டும் உபயோகிப் பாளர் வாகனக் கட்டணத் திருத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே தற்போதுள்ள அதிகப்படி யான சுங்கக் கட்டணம் குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் கூடுதல் கட்டண அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுசிலிண்டர்களின் அபரிமிதமான விலையேற்றத்தால் தொழில் வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உபயோகிப்பாளர் வாகனசுங்கக் கட்டணம் கூடுதலாக உயர்த்தப் பட்டிருப்பது தொழில் வணிகத்துறையினர் மட்டுமல்லாது, லாரி / பேருந்து உரிமை யாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நெல், சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பிற பொருட்களையும் லாரிகள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளதால், சுங்கக் கட்டண உயர்வு காரணமாக விலைகள் மேலும் அதிக அளவில் உயர ஏதுவாகும். 

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் முக்கியப் பணி அனைத்து மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைப்பது மற்றும் மேம்படுத்துவது ஆகும். பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமல்லாமல் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்தியாவசியமான தரமான சாலைகளை உருவாக்கும் பொறுப்பு  தேசியநெடுஞ்சாலைத்துறைக்கு உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒன்றிய அரசு நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை ஏற்படுத்தி, சுங்கச்சாவடிகளை அமைத்து, அவற்றை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.இந்தியாவில் உள்ள 29,666 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக 64.50 லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதோடு தினசரிரூ.135 கோடி கட்டணமும் வசூலிக்கப்படு கிறது. 

விதியை மீறும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள்
சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சுங்கக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் குத்தகைக்கு எடுத்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் யாரும் அதற்கு கட்டுப்படுவது கிடையாது. தற்போதுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லதுஒப்பந்தக்காரர்களால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும் சாலை ஒப்பந்ததாரர் சுங்கவரி சேகரிப்பில் 15 சதவீதம் சாலையின் வருடாந்திர பராமரிப்புக்காக செலவிட வேண்டும். ஆனால்ஒப்பந்ததாரர் இதனை முறையாக கடைப்பிடிப்பது இல்லை. இதனால் சாலை உபயோகிப்பாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எல்லை வரையறுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இல்லாததால், ஒழுங்கற்ற வாகனப் பார்க்கிங் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் நடைபெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை, உபயோகிப்பாளர்களுக்கு எந்தவித வசதியையும் முறையாக செய்து கொடுக்காத நிலையில் கூடுதல் சுங்கக் கட்டணத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வசூலிக்கத் தொடங்குகிறது ... சம்பாதிப்பதற்கு பதிலாகஉபயோகிப்பாளர்களுக்கு வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

ஆயுட்கால சாலை வரி ஒவ்வொரு புதியவாகனத்திற்கும் அரசுக்கு செலுத்தப்படு கிறது. எனவே, சுங்கச்சாவடிகளில், வாகனத்திற்கு ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. கோவிட்19 தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே தொழில்துறையினர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அத்தியாவசிய மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இத்தகைய சுங்கக் கட்டண உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகப் பாதிக்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் மற்றும் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான செலவைக் கொண்டு வருகிறது. எனவே சாலை அமைக்கப்பட்டு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் சுங்கச் சாவடிகளை அரசு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

வெள்ளை அறிக்கை வெளியிடுக!
கோவிட் 19 தொற்றுநோயால் தொழில் வணிகத் துறையினர் நிதி நெருக்கடி மற்றும் மோசமான வணிகத்தில் இருந்து மீண்டு வர உதவும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையால் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண உயர்வை திரும்பப் பெறவும், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 48 சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண விபரம், சுங்கச் சாவடிகளில் தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விபரங்கள் மற்றும் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் போன்ற  விபரங்களை உபயோகிப்பாளர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில், மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;