1931 ஆகஸ்ட் 5 அன்று அலமேலு - பக்கிரிசாமியின் மூன்றாவது குழந்தையாக, காரைக்காலில் பிறந்தவர் தனலஷ்மி. தந்தையை இழந்த குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. அதனால் மூன்று குழந்தை களுடன் அலமேலு தன் சகோதரர் வேலை செய்யும் பொன்மலைக்கு வந்தார். அங்கே மெஸ் ஒன்றை ஆரம்பித்தார். பள்ளி சென்ற நேரம் தவிர, மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருப்பார் தனலஷ்மி. தொழிலாளர்கள் தனலஷ்மியை ‘பாப்பா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது. ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு, விடுதலைப் போராட்டத்தையும் அறிந்துகொண்டார் பாப்பா. பாலர் சங்கத்தில் சேர்ந்தார். பாலர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்த பாப்பா, எட்டாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறினார். ஆனாலும், சொந்த முயற்சியில் நிறையப் படித்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ‘தொழிலரசு’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்தார். திருச்சிக்கு வரும் பொதுவுடைமை இயக்க தலைவர்கள் பலரால் பாப்பா ஈர்க்கப்பட்டார். அப்படித்தான் கே.பி.ஜானகியம்மாளின் அறிமுகம் கிடைத்தது. ஜானகியம்மாள் பாலர் சங்கத்துக்கு நாட்டுப்பற்று மிக்க பாடல்களை ஊட்டி வளர்த்தார். 1952ல் உமாநாத்தும் பாப்பாவும் திருமணம் செய்துகொண்டனர். தாலியோ, சடங்குகளோ இன்றி புரட்சிகரமாக அவர்களது திருமணம் நடைபெற்றது. 1970ல் கே.பி.ஜானகியம்மாளும் பாப்பாவும் சேர்ந்து ஜனநாயக மாதர் சங்கத்தை நிறு வினார்கள். அடுத்த 20 ஆண்டுகள் பொதுச்செய லாளராக இருந்து வழி நடத்தினார் பாப்பா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக் குழு உறுப்பினர் என கட்சிப் பணியாற்றினார் பாப்பா உமாநாத். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் சிறப்பாகச் செயலாற்றினார் பாப்பா. 2010 டிசம்பர் 17 அன்று ஓய்வெடுத்துக் கொண்டார்.