மதுக்கூர் ராமலிங்கம்
அண்மையில் புன்செய் புளியம்பட்டியில் பெரியார், அண்ணா சிந்தனையாளர் பேரவை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து நடத்திய புத்தக கண்காட்சிக்கு திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.வெ.குமாரராசா தலைமை வகித்தார். மருத்துவர் பு.சா.இராணி வரவேற்றார். புத்தக கண்காட்சியில் பங்கேற்று கருத்துரை யாற்றிய கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், மானிட சமுத்திரம் நான் என்று கூவு என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்ந்து நல்ல பகுத்தறிவும் ஒரு போக்கு சிந்தனையும் கொண்ட புன்செய் புளியம்பட்டியில் மறைமலை அடிகளை பாவாணரை பெருஞ்சித்திரனாரை கொண்டாடிய ஊரில் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருவிழாவில் காணாமல் போனால் கஷ்டம். புத்தகத் திருவிழாவில் காணாமல் போனால் மகிழ்ச்சி. நீங்கள் யார் என்று உங்களை நீங்கள் கண்டடையலாம். கடவுள் உண்டு என்கிற புத்தகங்களும் உள்ளது, இல்லை என்கிற புத்தகங்களும் உள்ளது. இங்கே எல்லாருக்குமான இடம் இருக்கிறது. பெரியாரின் சிந்தனைகள் இருக்கிறது, இசுலாமிய சிந்தனை இருக்கிறது. பொதுவுடைமை சிந்தனைகள் உள்ளது, பொன்னியின் செல்வன் இருக்கிறார். வைகுண்டர் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஜனநாயகம். மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டையை ரத்தினக் கம்பளம் விரித்து பாட்டு எழுத அழைக்கவில்லை.
ரொம்ப சிரமப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார். வாய்ப்பு கேட்டு சென்ற போது சாமி பாட்டு எழுதித்தருமாறு கேட்டுள்ளனர். பக்தி பாட்டு எழுதுவது எளிதான வேலை. காதல் பாட்டு எழுவதுதான் கடினம். எதையாவது நாலு வார்த்தை எழுதி விட்டு கோவிந்தா, நமச்சிவாயா என்று போட்டு விட்டால் சாமி பாட்டு. ஆனால் பட்டுக் கோட்டை எழுதினார், நல்லாருக்கும், பொல்லாருக்கும் நடுவில் இருக்கும் சாமி நீ கல்லா போன காரணத்தை எல்லா ருக்கும் காமி என்றார். அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா. இன்பம் என்ற சொல்லைக் கேட்டதுண்டு அது எங்கள் வீட்டுப்பக்கம் வந்ததுண்டா என்று அடுத்த வரியில் கடவுளைக் கேட்டார். அவர் வாழ்ந்தது 29 ஆண்டுகள். சினிமாவிற்கு பாட்டு எழுதியது 9 ஆண்டுகள். அதற்குள் சித்தர் போல உச்சம் தொட்டார். ஒன்றாம் தேதியானால் பட்டுக்கோட்டையை மறக்கவே முடியாது. அவர் தான், ‘கையில வாங்குனே பையில போடல காசு போன இடம் தெரியல’ என்று எழுதினார். ‘விதவிதமா துணிகள் இருக்கு விலையைக் கேட்டால் நடுக்கம் வருது’ என்றார் அந்த பாடலில். அப்பவே அப்படி என்றால் இன்று ஜிஎஸ்டி வந்த பிறகு எப்படி என யோசித்து பார்க்க வேண்டும். ஜீவா, அண்ணா,கலைஞர் ஆகியோர் சட்ட மன்றத்தையே இலக்கிய பட்டிமன்றம் போல் நடத்தினர். எந்த தொகுதியிலும் நின்று வெற்றிபெற்ற வரலாறே இல்லாத ராஜாஜி ஒருமுறை ஜீவாவைப் பார்த்து கேட்டார்,
பொதுவாக கம்யூனிஸ்டுகள் அமெரிக்கா, ரஷ்யா என்று தானே பேசுவீர்கள், இப்போ என்ன சர்வதேச பிரச்சனையை விட்டு உள்ளுர் பிரச்சனை களை பேசிக் கொண்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர். உங்களுக்கு எந்த தொகுதியும் இல்லை எனக்கென்று ஒரு தொகுதி இருக்கிறது அதைப் பற்றி பேச வேண்டுமல்லவா என்றார். முருகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். தன்னுடைய உரிமைகள் மறுக்கப்பட்டால் அரை நிர்வாணமாகப் போராடு என்று சொல்லிக் கொடுத்தவர் முருக பெருமான். அப்படித்தான் பழனி மலைமேல் நிற்கிறார். கடவுள் முருகனிடம் மனிதரான அவ்வை கேட்டார் ஆறுவது சினம், கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ என்றார். மேலும் உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வை யின் தமிழுக்கு உரிமையுண்டு என்று கண்ணதாசன் எழுதினார். கடவுளா, மொழியா என்று வந்தால் கடவுளைவிட மொழியை ஒருபடி மேலே வைத்துப் பார்த்தான் தமிழன். அதுதான் தமிழின் சிறப்பு. இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்ற தேவநேய பாகவதர் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லையே என்று சிவனைப் பார்த்து கேட்டார். அந்த வரிசையில் தான் பெரியார் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட் டத்தின் போது சைவர்களைப் பார்த்து கேட்டார். சிவ பெருமான் பேசிய மொழி தமிழ் என்றால் அந்த தமிழுக்கு ஆபத்து, சைவர்களே திரண்டு வாருங்கள் என்று அழைத்தார், வைணவர்களை அழைத்தார். புத்தகம் என்பது நமது முன்னோர்கள் நமக்கு எழுதி வைத்துள்ள உயில் என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற குறளுக்கு கொரோனா புது உரை எழுதியது. இந்த உலகில் எல்லா உயிர்க்கும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்று. மனிதனுக்கு இரண்டு குணங்கள் உள்ளது. ஒன்று மனித குணம், மற்றொன்று மிருக குணம். இந்த புத்தகங்கள் மனிதனுக்குள் இருக்கும் மிருக குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். சங்க இலகத்தியத்தின் காலம் அறுதியிட்டு சொல்லப்பட வில்லை. அதில் குரங்கின் கையில் கிடைத்த மயிலின் முட்டையை தாய் மயில் முட்டையை அடைகாத்தால் என்ன வெப்பம் இருக்குமோ, அந்த வெப்பத்தை மலையின் உச்சிக்குச் சென்று பாறையின் மீது அதிகாலை பொழுதில் வைத்து இளம் வெயிலின் சூட்டை முட்டையின் மீது ஏற்றி அதிலிருந்து வந்த மயில் குஞ்சை கையில் ஏந்திச் சென்று காட்டினில் விட்டது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. கீழடியும், ஆதிச்ச நல்லூரும் அதை இன்றும் கூறுகிறது. அன்றைக்கு அறிவொளி இயக்கங்கள் தேவைப்படவில்லை. ஏராளமான பெண் கவிஞர்கள் இருந்தனர். தமிழன் பயன் படுத்திய நெல்லுக்கே 2000 வயது என்றால் தமிழன் பயன் படுத்திய சொல்லுக்கு என்ன வயதிருக்கும். பெரும்பான்மை, சிறுபான்மை என்கின்றனர்.
பெரும்பான்மை என்கிறவர்களை சனாதனத்தின் பெயரால் புத்தகங்களை படிக்க விடாமல் தடுத்தனர். அதற்குப் பெயர் தான் குருகுலக் கல்வி. படிப்பு மறுக்கப்பட்ட உழைக்கும் எளிய மக்களின் பிள்ளை களை சமணப்பள்ளி, புத்தப்பள்ளிகள் அழைத்து படிப்பு சொல்லிக் கொடுத்தன. அதனால் ஆங்கிலேயன் கொண்டு வந்த ஸ்கூலுக்கு பள்ளி என்று பெயர் வைத்தான் தமிழன். இவ்வாறு ஒவ்வொரு பெயருக்குள்ளும் வரலாறு, சமூக நீதிக்கான போராட்டம் ஒளிந்திருக்கிறது. முதல் தலைமுறை பட்டதாரி, இன்ஜினியர், டாக்டர் என்று தட்டுத்தடுமாறி வரும் நம்மை, வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்து என்றவர்களின் நீட்சிதான் இன்றைய புதிய கல்விக் கொள்கை. நீட் என்கிற பெயரில் ஒரு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு இது புதுதில்லை. தொலைதூரக் கல்வி முதலில் கற்றவன் ஏகலைவன்தான். ஏகலைவன்கள் வந்தால் அர்ச்சுனன்களை காலி செய்து விடுவர் என்று குருதட்சணை யாக இரக்கமே இல்லாமல் திறமைக்கு அடிப்படையான நாண் எய்யும் கட்டை விரலை வெட்டிக் கொடு என்று கேட்டான். இந்நிலையில் ஏன் இந்த உலகம் இன்னும் இருக்கிறதென்றால் தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அடுத்தவனைப் பற்றியும் சிந்திப்பதால் இன்னும் இருக்கிறது என்கிறது சங்க இலக்கியம். தொட்டனைத் தூரும் மணற்கேணி என்ற குறளின் பொருள் போல ஊரணி என்பது பொதுவானது, யாருக்கும் சொந்த மில்லை. கல்வியும் அது போன்றதுதான். குரங்குகளிடம் புத்தகத்தைக் கொடுத்தால் படிக்காது கிழித்து எறியும். இதைப் படித்ததால்தான் குரங்கிலிருந்து மனிதனாகி விட்டான் என்ற கோபமா எனத் தெரியவில்லை. அதுபோல் இங்கு சில குரங்குகள் சில நம்மைப் படிக்க விடமால் செய்கிறது. அதனைக் கடந்து படிப்பது கூட ஒரு வகைப் புரட்சி தான் என்றார்.