tamilnadu

img

மதுரை கட்டட விபத்தில் சிக்கிய 3 பேர் பலி

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை செக்கானூரணி  பகுதியில் மாதவன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் முறையான அனுமதி இல்லாமல் 3 மாடிக் கட்டடம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று மாலை திடீரென அந்தக் கட்டடம் இடிந்து கீழே சரியத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதனிடையே விபத்து நடந்த இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர்  ராஜசேகர் மாவட்ட கண்காணிப்பாளர்,  மாவட்ட வருவாய்  அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மாதவனை செக்கானூரணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கிணறு இருந்த இடத்தில் வீடு கட்டப்பட்டதால் கட்டடம் சரிந்து விட்டதாகவும் வீடு கட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.