ஈரோடு, ஜூன் 28- சுகாதாரப் பணிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி தூய்மைபணியாளர்கள் 6 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல், சுகாதாரப் பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு, ஏஐடியுசி மற்றும் எல்பிஎப் தலைமையில் செவ்வாயன்று 5 ஆவது நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதற்கிடையே மாநகராட்சி அலுவலகவளாகத்தில் திரண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு மனு அனுப்பினர். இந்நிகழ்வில் தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, 6 ஆவது நாளான புதனன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
உண்ணாவிரதம்
இதன்தொடர்ச்சியாக, புதனன்று ஈரோடு காளை மாடு சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட சங்க தலைவர்கள் உரையாற்றினர். உண்ணாவிரதத்தில் திரளான தூய்மைப்பணியாளர்கள், தங்களது குடும்பஉறுப்பினர்களு டன் கலந்து கொண்டனர். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில், இப்போராட்டம் மேலும் தீவிரமடையும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.