அழகேசனும் ஆரணி சுந்தரும் தருமையாதீனத் தமிழ்க் கல்லூரியில் புலவருக்குப் படித்து வந்தனர்.வெளியூரிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த சுந்தர் நாஞ்சில்நாட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தான்.சுந்தர் அழகேசனுக்கு உயிர் நண்பன்.அவனோடு படித்தவர்களில் இன்றுவரை அவனோடு தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது அவன் மட்டுமே. அன்று கல்லூரி முடிந்து புதிதாக வெளிவந்திருக்கும் சிவாஜியின்’ சிவந்த மண் ‘திரைப்படத்திற்குப் போவதென முடிவு செய்திருந்தார்கள்.அழகேசன் மயிலாடுதுறைக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலங்குடியில் இருந்து நாள்தோறும் மிதிவண்டியில் வந்து படித்துக் கொண்டிருந்தான். அழகேசனின் மிதிவண்டியில் சுந்தர் ஏறிக்கொள்ள மயிலாடுதுறை கௌரி திரையரங்கிற்குச் சென்றனர்..புதுப்படம் என்பதால் டிக்கெட் கொடுக்குமிடத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.இரண்டு பக்கமும் அடைத்து,மேலேயும் அடைத்து குகைக்குள் செல்வதுபோல அமைத்து இருப்பார்கள். சுந்தரும் அழகும் அந்த நீண்ட குகைக்குள் புகுந்து டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மின் விசிறி இருக்கும் இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டனர்.படம் பத்து மணிக்கு முடிந்து வெளியே வந்தவர்கள்.இரவு டிஃபன் விற்கும் தள்ளுவண்டிக் கடையிலே ஆறு இட்லியும் ஒரு முட்டை ஆம்லெட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு தேநீர் குடித்துவிட்டுப் புறப்பட்டார்கள். “மாப்பிள என்னை விட்டுவிட்டு நீ ஊருக்குப் போவதற்கு முடியுமா?
இருபது கிலோமீட்டர் போகணுமே.என் ரூம்லேயே தங்கிட்டு காலையில காலேஜுக்கு போயிட்டு நாளைக்கு சாயந்தரம் போகலாமே”என்றான் சுந்தர்.”இல்ல மாப்ள, நான் செம்பனார்கோயில் எங்க அங்கா வீட்டுகுப் போயிட்டு அங்கிருந்து காலையில காலேஜுக்கு வந்துடறேன்” என்றான் அழகேசன். சுந்தரை அவன் அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவன் அக்காவீட்டிற்குப் புறப்பட்டான்.தருமபுரத்தைத் தாண்டி மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி அருகில் வரும்போது ஒரு லாரி சாலை நடுவே நின்று கொண்டிருந்தது. நடுவில் நிற்பதால் உடனே வண்டியை எடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தோன்ற, வேறொரு எண்ணமும் அவன் சிந்தனையில் தோன்றியது.’அவ்வளவு தூரம் சிரமப்பட்டு மிதித்துக் கொண்டு போவதற்கு, பேசாம இந்த லாரியின் பின்பக்கத்தைப் ஒரு கையால் பிடித்துக் கொண்டால் சிரமமில்லாமல் போய்விடலாம்’ என்ற எண்ணம் தோன்றியது. லாரியின் பின்புறம் இடதுபக்கம் பிடித்துக் கொள்ள வசதியாக ஒரு கம்பி இருந்தது. ஒரு காலைத் தரையில் ஊன்றியபடி தன்னுடைய வலது கையால் கம்பியைப் பிடித்துக் கொண்டான்,அவன் நினைத்தது போலவே உடனே லாரி புறப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மகிழ்ச்சியாக இருந்த பயணம் லாரி வேகமெடுக்கத் தொடங்கியவுடன் மிதிவண்டியின் முன்பக்க சக்கரம் துள்ள ஆரம்பித்துவிட்டது.இனியும் லாரியிலிருந்து கையை எடுக்கவில்லை என்றால் ‘அவ்வளவுதான் முடிந்தது நம் கதை’என்ற பயம் தோன்ற உடனே கையை எடுத்து மிதிவண்டியின் வலது பக்கக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டான்.இருந்தாலும் வந்த வேகத்தால் மிதிவண்டியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குள் சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் மிதிவண்டி இறங்கியது. முன் சக்கரம் இறங்கியதால் பின்சக்கரம் தூக்கித் தலைகீழாக விழ அழகும் சாலையில் தூக்கி வீசப்பட்டான். உடம்பில் பலத்த அடி,உடம்பு தார்ச்சாலையில் தேய்த்ததால் கை,கால் என்று பல இடங்களில் காயமாகி இரத்தம் வழிந்தது. அலங்கோலமாகக் கிடந்த மிதிவண்டியைத் தூக்கி நிறுத்தினான்.அந்த இடம் இருட்டாக இருந்தது.கொஞ்ச தூரம் வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தான்.ஏறி மிதிக்கவே முடியாத அளவு பயத்தால் எற்பட்ட நடுக்கத்தினால் நடையில் தளர்ச்சி. மின் விளக்கில் நிறுத்தி உடலில் காயம்பட்ட பகுதிகளைப் பார்த்தான்.பக்கத்திலிருந்த பொதுக் குழாயடியில் காயம்பட்ட இடங்களைத் தண்ணீரால் கழுவிக்கொண்டான்.மிதிவண்டியில் ஏதாவது பழுதாகியிருக்கிறதா என்று பார்த்தான்.கைப்பிடி வளைந்து இருந்தது அதை சரி செய்து கொண்டு அக்கா வீட்டிற்குச் செல்லாமல் மீண்டும் சுந்தர் தங்கியிருக்கும் அறைக்கே வந்துவிட்டான்.சுந்தரிடம் நடந்த செய்தியைச் சொன்னான்.சுந்தர் அழகேசனின் செயலுக்காகக் கோபித்துக் கொண்டு திட்டினான். இந்த நிகழ்வை நினைக்கும் போதெல்லாம் அழகேசனுக்கு உடல் சிலிர்த்துவிடும்.அழகேசனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை நீங்களும் பெற வேண்டாம் குழந்தைகளே!
. கோவி. பால.முருகு