சின்ன இதழின் சிரிப்பு என்னை
சிறையி லடைக்குதே!-உன்க
ண்ணின் பார்வை காந்த மாகிக்
கவர்ந்து இழுக்குதே!
பிஞ்சுக் கால்கள் பின்னும் அழகில்
பெருமை கொள்ளுதே!-உன்
பஞ்சு விரல்கள் பட்டு நெஞ்சைப்
பற்றிக் கொள்ளுதே!
குழறும் மழலைக் குழலாய் வந்து
குவியும் செவியிலே!-உன்
குறும்புத் தனங்கள் கூடி வந்து
குளிர வைக்குதே!
பழகும் சொல்லோ பற்றி வந்து
பழமாய் இனிக்குதே!-உன்
அழகு உடலின் மேனி பட்டு
அங்கம் சிலிர்க்குதே!
செல்வம் பலவும் சேர்ந்த போதும்
செல்வம் நீதானே!-உன்
கள்ளம் இல்லா அன்பில் நானும்
கரைந்து போனேனே! !
பெண்மை எனக்குத் தாய்மைப் பேற்றைப்
பெற்றுத் தந்தாயே!-உன்
கண்ணக் குழியின் வண்ணம் கொண்டு
கவலை தீர்த்தாயே!!