tamilnadu

img

கவலை தீர்த்தாயே..! - கோவி.பால.முருகு

சின்ன  இதழின் சிரிப்பு  என்னை
     சிறையி லடைக்குதே!-உன்க
ண்ணின்  பார்வை  காந்த மாகிக் 
    கவர்ந்து   இழுக்குதே!

பிஞ்சுக்   கால்கள் பின்னும் அழகில்
    பெருமை  கொள்ளுதே!-உன்
பஞ்சு விரல்கள் பட்டு  நெஞ்சைப்
    பற்றிக் கொள்ளுதே! 

குழறும் மழலைக் குழலாய்  வந்து 
    குவியும் செவியிலே!-உன்
குறும்புத் தனங்கள்  கூடி வந்து       
    குளிர    வைக்குதே!

பழகும் சொல்லோ  பற்றி வந்து
    பழமாய் இனிக்குதே!-உன்
அழகு  உடலின்  மேனி பட்டு   
    அங்கம் சிலிர்க்குதே! 

செல்வம் பலவும் சேர்ந்த போதும்  
    செல்வம்  நீதானே!-உன்
கள்ளம் இல்லா   அன்பில் நானும்
    கரைந்து போனேனே! !
               
பெண்மை எனக்குத் தாய்மைப் பேற்றைப்  
    பெற்றுத்  தந்தாயே!-உன்
கண்ணக் குழியின் வண்ணம் கொண்டு
    கவலை தீர்த்தாயே!!