இஸ்லாமியர்க்கு எதிரான சதியை முறியடிப்பதே முதல் பணி!
த்தாராம் யெச்சூரி நகர்- (மதுரை), ஏப். 2 - இஸ்லாமியர்கள் மீதான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையின் மற்றொரு தாக்குதலாக வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தும், நாடு முழுவதுமுள்ள பல லட்சம் ஏக்கர் நிலம் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை அபகரிக்கும் திட்டத்துடன் வக்பு சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. இதனை புதனன்று மக்களவையில் தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்தது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டால், அதனை அறிமுக நிலையிலேயே தோற்கடிப்பது என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறும், அதில் பங்கேற்பதைக் கூட தள்ளிவைத்து, மசோதாவை முறியடிப்பதே தங்களின் முதல் பணி என்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர். குறிப்பாக, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழுச் செயலாளருமான சு. வெங்கடேசனும் மோடி அரசின் சதியை முறியடிக்க தில்லி புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை சு. வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். அதில், “53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு. ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைய இரண்டு மாத காலமாக உழைத்திட்ட எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன். தற்போது தொடக்க விழா (புதனன்று) நடைபெற்றது. ஆனால் அது துவங்குவதற்கு முன்பாக காலை 9.50 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் தில்லி செல்கிறேன். நாடாளுமன்றத்தில் வக்புவாரிய திருத்தச் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதனன்று தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, உடடினயாக நிறைவேற்றப் போகிறது. ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த, ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மதச்சார்பற்ற கோட்பாடுகளைப் பாதுகாக்க, இஸ்லாமியர்-சிறுபான்மை மக்கள் மீது நடைபெறும் தாக்ககுதலைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் நாடாளுமன்றம் செல்கிறேன். மோடி அரசின் மக்கள் விரோத வக்புவாரிய திருத்த மசோதாவை முறியடிப்போம். நம்முடைய லட்சியங்கள் நம்முடைய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய உரிமைகளுக்கு நாமன்றி யார் நிற்பது?” என்று குறிப்பிட்டுள்ளார்.