என்ன தம்பி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்குற மாதிரி தெரியுது..
அண்ணா... ஆமாண்ணா... முதல்நிலைத் தேர்வு ரிசல்ட் வந்துச்சுல... நானும் கேக்கனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன்.. உங்களுக்கு என்ன ஆச்சு..
முதல்ல நீ சொல்லு..
நா 2ஏ-ல பாஸ் பண்ணிருக்கேன்... 2உம் எதிர்பார்த்தேன்... ஆனா வரல..
ஓகே.. ஓகே... நல்லா ரெடி ஆகிக்கலாம்..
உங்களுக்கு என்னனு கேட்டேன்..
நான் ரெண்டும் பாஸ் பண்ணிருக்கேன்..
சூப்பர் ணா... அடுத்து எப்புடி தயார் பண்ணப் போறீங்க..
தம்பி... இப்போ பாடத்திட்டம் மாத்திருக்காங்க.. குரூப் 2 முதன்மைத் தேர்வு முன்னாடி இருந்த மாதிரிதான் இருக்கும்... எல்லாத் தேர்வுலயும் ஒரு வினாவுக்கு நாலு விடைகளைக் குடுத்து இதுல ஏதாவது ஒண்ணு கேப்பாங்க... அப்புடி விடை சொல்லியே பழக்கமாகிப் போச்சு.. முதன்மைத் தேர்வுல விளக்கமா எழுதனும்ல...
அண்ணா... நா இதப்பத்தி யோசிச்சுப் பாத்துருக்கேன்.. அது ஒண்ணும் பெரிய சிரமம் இல்லியே..
நாம தயாரிக்குறது முதல்நிலைத் தேர்வுக்குதான்.... பாஸ் பண்ணுன பிறகு முதன்மைத் தேர்வுக்குப் பாத்துக்கலாம்னு விட்டுருவோம்... முதல்நிலைத் தேர்வு முடிஞ்சவுடனயும் தயாராக மாட்டோம்.. அந்தத் தேர்வு முடிவு வந்து நம்ம நம்பர் அதுல இருந்தாதான் படிக்க ஆரம்பிப்போம்.. அதுலயும் ஒரு பயிற்சி மையத்துக்குப் போனா, முதல் நாளே மாதிரித் தேர்வு வைப்பாங்க..
அது ஏன் அண்ணா..?
அதுக்கு தனி கட்டணம் இருக்கும்... 50 நாள்ல 30 தேர்வு எழுதிருங்கனு சொல்வாங்க.. ஒரு மாதிரித் தேர்வுக்கு இவ்வளவு கட்டணம்னு வெச்சுருப்பாங்க..
ஆனா அண்ணா, இந்த மாதிரி விடைகள விளக்கமா எழுதுறதுக்கு நாம ஏற்கனவே பழக்கமானவங்கதான..
எப்புடி தம்பி சொல்ற..?
அண்ணா, பள்ளிக்கூடத்துலயே இப்படித்தான படிச்சோம்.. நம்ம பத்தாம் வகுப்பு வினாத்தாள் எப்புடி இருந்துச்சு..? ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், அஞ்சு மதிப்பெண்ணுனு தான இருந்துச்சு.. இப்ப நமக்கு இருக்குற முதல் நிலைத் தேர்வையும், முதன்மைத் தேர்வையும் ஒண்ணா வெச்சா எப்புடி இருக்குமோ, அப்படித்தான் அன்னிக்கு வினாத்தாள் இருந்துச்சே... அதப்படிச்சு பாஸ் பண்ணிட்டுதான நாம எல்லாரும் வந்துருக்கோம்..
தம்பி, நல்லாச் சொன்னீங்க... இன்னிக்கு வகுப்புல இத வெச்சு அரைமணி நேரம் ஓட்டிடுறேன்..
ஆமாண்ணா... ரெண்டுக்கு தனித்தனியாப் படிக்கனும்குறது பயிற்சி மையங்களோட அணுகுமுறை... அப்பதான் தனித்தனியா வகுப்பு நடத்தலாம்... தனித்தனியா கட்டணம் வசூலிக்கலாம்.. நீங்க கூட ஒருதடவை Exam-Oriented(தேர்வு சார்ந்த) மற்றும் Knowledge-oriented(அறிவு சார்ந்த)னு விளக்குனீங்கள்ல.. அறிவு சார்ந்த தயாரிப்புல ஒரே நேரத்துல நம்மால முதல்நிலைத் தேர்வுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் தயாராகிட முடியும்..
சூப்பர் தம்பி, குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கு இந்த முறை வினாத்தாள் பெரிய அளவுல மாறியிருக்கு..
அதத்தான் நானும் சொல்ல வந்தேன்.. குரூப்2, குரூப் 2 ஏ.. ரெண்டுக்கும் முதன்மைத் தேர்வு ஒரே நேரத்துல நடக்குது.. உங்கள மாதிரிப் பல பேரு ரெண்டும் எழுதப்போறாங்க.. ரெண்டுக்கும் வினாத்தாள் வேற மாதிரி இருக்கும்.. இதுவரைக்கும் ரெண்டுமே விளக்கமான விடைகளாகத்தான் இருந்துச்சு... இந்த வருஷத்துல இருந்து குரூப் 2ஏக்கான முதன்மைத் தேர்வும் கொள்குறிவகை வினாக்களாக(Multiple-choice Questions)த்தான் இருக்கப் போகுது..
ஆமாம்ப்பா.. இதுல கணிதத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்துருக்காங்க.. பெரும்பாலும் டி.என்.பி.எஸ்.சிக்குப் படிக்குறவங்க கணிதத்துலதான் ‘வீக்’ ஆ இருப்பாங்க..
கடனுக்குனு படிச்சவாங்களாச்சே... கடன் குடுக்குறது மாதிரியோ, இல்லேனா கடன் குடுக்குற மாதிரியோ படிச்சுருந்தோம்னா ஈசியா இருந்திருக்கும்..
என்ன தம்பி, புதுசாச் சொல்றீங்க..
அதாவது, ஒரு கணக்கு சொல்றேன் கேளுங்க... ராமன், கிருஷ்ணனுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுக்குறான். அதுக்கு 5 விழுக்காடு வட்டி போட்டு, 3 வருஷம் கழிச்சு திருப்பித் தரனும்னா எவ்வளவு தரணும் கேள்வி..
சாதாரண வட்டிக்கணக்குதான..
ஆமா.. சில பேருக்கு என்ன தோணும்னா, கிருஷ்ணன் வாங்குனா என்ன... திருப்பிக் குடுத்தா என்ன... இப்படித்தான் யோசிப்பாங்க.. இதுல ராமன்குற இடத்துல உங்க பேரைப் போட்டுக்குங்க.. கிருஷ்ணனோட இடத்துல உங்களுக்குப் பிடிக்காத ஒரு ஆளோட பேரப் போடுங்க... கணக்கு உங்களோடதா மாறிடும்.. பைசா சுத்தமா விடை வரும்.. பணம் உங்களுக்குல வரணும்..
தம்பி, கலக்குறீங்க... இந்த தமிழ் தகுதித்தேர்வுலதான் ஆங்கில மீடியத்துக்காரங்க திணறிப் போயிடுறாங்க.. அப்புறம் அந்த ஆங்கிலத்துலருந்து தமிழ், தமிழ்லருந்து ஆங்கிலம் மொழிபெயர்ப்பெல்லாம் கஷ்டமாத்தான் இருக்கு... தமிழ் மீடியத்துக்காரங்களுக்கு ஆங்கிலம் வராதுல்ல..
ரொம்ப நாளா இப்புடித்தான் சொல்றாங்க... ஆங்கில மீடியம் படிக்குறவங்களுக்கு ரெண்டுமே வரமாட்டேங்குதுன்னு இப்போ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..
அருகில் நின்ற மற்ற தேர்வர்களும் சிரித்தனர்.
அதில் ஒருவர், முதன்மைத் தேர்வுக்காக இப்போ என்ன பண்ணிட்டு இருக்கனும்னு சொல்லுங்கண்ணா..
சொல்லப்போனா, நாம பாடங்களத் திருப்புதல் செஞ்சுட்டு இருக்கனும்.. சில மையங்கள்ல முத நாளே மாதிரித்தேர்வு வெக்குறாங்கன்னு நீங்கள்லாம் குற்றம் சாட்டுற மாதிரி பேசுறீங்க... அது சரியான வழிகாட்டுதல்தானே... 50 நாள்ல படிச்சு எப்புடிப் பாஸ் பண்ணப் போறீங்க... ஏற்கனவே படிச்சுருந்துருக்கனும்.. அதத் திருப்பிப் பாக்க வேண்டிய நேரமிது..
ஆமா... திருப்புதல் இல்லேனா என்ன நடக்கும்னு நீங்க ஒருதடவை வகுப்புல சொன்னது நினைவு இருக்கு..
என்ன சொன்னாரு..
ஒரு படத்துக் காட்சியச் சொன்னாரு... அந்தக் காட்சில “அன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்”னு ஆரம்பிப்பாரு... தடை வந்துரும்.. மறுபடியும் அங்க இருந்தே ஆரம்பிப்பாரு... திருப்புதல் இல்லேனா நாமளும் தேர்வு அறைல உக்காந்துக்கிட்டு இப்புடித்தான் சொல்லிட்டு இருப்போம்னு சொன்னாரு..
எல்லாரும் அங்க பாருங்க...
அண்ணாந்து பார்த்தனர். பறவைக்கூட்டம் பறந்து சென்று கொண்டிருந்தது. தம்பி... இடம் பெயர்தல்னு சொல்ல வர்றியா.. பாடத்தோட இணைக்கனும்ல...
ஆமா அண்ணா.. இணைக்கனும்... இடம் பெயர்தல்னு நீங்க சொல்றது புவியியல் ரீதியானது.. காலநிலை இந்த இடம் பெயர்தலத் தீர்மானிக்கும்.. தமிழ் தகுதித் தேர்வு இருக்குல்ல... பறவைக்கூட்டம் இப்புடிப் போறதுக்கு ‘வலசை போதல்’னு சொல்றோம்னு சேத்துப் படிச்சுக்கலாம்.. இதே மாதிரி ராத்திரில எல்லாரும் அண்ணாந்து பாருங்க.. ஜூ பிடர், அதான் வியாழன் தெரியுது.. சூரியக் குடும்பத்துல அஞ்சாவது கோள்..
இப்புடியே மொழிபெயர்ப்புக்கும் படிச்சுக்குறீங்க போலருக்கே.. இன்னிக்கு தம்பி நமக்கு வகுப்பு எடுத்துருக்காப்ல... தோளில் தட்டிக் கொடுத்தவாறே அனைவரும் கிளம்பினர்.