சென்னை, ஜூலை 17- உயர்கல்வித்துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல்லில் உள்ள கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்காலிக கட்டிடங்களில் இயங்கிவந்த புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு கலை -அறிவியல் கல்லூரிக்கு ரூ. 12.40 கோடியிலும், திருமயம் அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியிலும், திருச்சி, மணப்பாறை அரசு கலை-அறிவியல் கல்லூரிக்கு ரூ.14.94 கோடியிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் ரூ.3 52 கோடியில் 8 ஆய்வகக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதே போல்,கோயம்புத்தூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.9.43 கோடியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகக்கட்டிடங்கள் என ரூ.52.75 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.