மதுரை, ஜன.3- 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுத்த அதிமுகவினரை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்பட 26 பேர் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ‘‘2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் செல்லூர் கே.ராஜூ போட்டியிட்டார். அதிமுக சார்பில் மக்களுக்கு வாக்குக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம். இந்த வழக்கு விசாரணை தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை காரணம் காட்டி காவல்துறையினர் தொடர்ச்சியாக துன்புறுத்துகின்றனர். எனவே எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளருமான உ.வாசுகி உள்பட 26 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை திங்களன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை கண்டித்தே மனுதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்குக்கு பணம் கொடுப்பது தவறானது என் பதன் காரணமாகவே, சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தர விட்டார்.