tamilnadu

img

அந்தப் புன்னகை மறைந்தது

திருச்சூர், மார்ச் 27-  மலையாள திரைப்படத்தின் அப்பாவித்தனமான மாறாத புன்னகைக்கு சொந்தக்காரரான இன்னசென்ட் காலமானார். அவருக்கு வயது 75. ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக, சுவாச நோய்கள், பல உறுப்புகளின் செயலிழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கு வழிவகுத்தன. பல ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இன்னசென்ட்-ன், உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கொச்சியில் உள்ள லேக் ஷோர் மருத்துவமனையில் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். 40 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னிலையில் இருந்த இன்னசென்ட், 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014இல் சாலக்குடி தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார். இரிஞ்ஞாலக்குடா நகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தார். இவர் கடைசியாக 2022 இல் வெளியான ‘புலி’ என்ற படத்தில் நடித்தார்.

1989 இல் ‘மழவில்காவடி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில விருது பெற்றார். இன்னசென்ட்டின் ‘விடபரயும்மும்பே’, ‘ஓர்மக்காயி’ ஆகியவை சிறந்த திரைப்படத்துக்கான இரண்டாவது மாநில விருதைப் பெற்றன. ‘பாத்தாம் நிலையிலே தீவண்டி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான திரைப்பட விமர்சகர் (பிலிம் கிரிட்டிக்) விருது உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இன்னசென்ட் 1948 பிப்ரவரி 28 இல் இரிஞ்ஞாலக்குடா தெக்கேத்தலா வரீத் மற்றும் மார்கலித்தா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இரிஞ்ஞாலக்குடா லிட்டில் ஃபிளவர் கான்வென்ட், நேஷனல் ஹைஸ்கூல் மற்றும் டான்போஸ்கோ எஸ்என்எச் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார். 1972 ஆம் ஆண்டு ‘நிர்த்தசாலா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பிறகு ஜீசஸ், நெல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அதை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கினார். ‘இளக்கங்ஙள்’, ‘விட பறயும் மும்பே’, ‘ஒரு கதா ஒரு நுண கதா’ போன்ற படங்களைத் தயாரித்தார். பின்னர் முழுநேர நடிகரானார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் சிறந்து விளங்கினார். 1989 இல் வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ திரைப்படத்தில் மன்னார் மத்தாயி என்னும் முழு நீள நகைச்சுவை வேடம் ‘இன்னசென்ட்’ என்ற பெயர், மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாததாக மாற்றியது. பரதன், பிரியதர்ஷன், தியன் அந்திகாட், பாசில், சித்திக்லால் போன்றவர்களின் படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் இன்னசென்ட்.

இவர் தமிழில் லேசா லேசா, இந்தியில் மலாமல் வீக்லி, டோலி சாஜா கே ரக்னா ஆகிய படங்களிலும், ஷிகாரி என்னும் கன்னட படத்திலும் நடித்துள்ளார். மழக்கண்ணாடி, நான் இன்னசென்ட், கேன்சர் வார்டில் சிரி, காலன்றே டில்லி யாத்ரா அந்திக்காடு வழி, தெய்வத்தை சல்லியப்படுத்தருது (கடவுளை தொந்தரவு செய்யாதே), இரிஞ்ஞாலக்குடக்கு சுற்றிலும் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ‘சிரிக்கு (சிரிப்புக்கு) பின்னால்’ என்பது இவரது சுயசரிதை. இவருக்கு ஆலிஸ் என்கிற மனைவியும், சோணட் என்கிற மகனும் உள்ளனர்.

முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி

மலையாள சினிமாவின் தனித்துவமான நடிகரான இன்னசென்ட்டின் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டுள்ள இரிஞ்ஞாலக்குடா நகர மண்டபத்தில் முதலமைச்சர் இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்னசென்ட்டின் மனைவி ஆலிஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அவரது மனைவி கமலா பங்கேற்றார். இன்னசென்ட்டின் இறுதி நிகழ்ச்சிகள் இரிஞ்ஞாலக்குடா புனித தாமஸ் பேராலயத்தில் செவ்வாயன்று காலை 10 மணியளவில் நடைபெறும். திங்களன்று (மார்ச் 27) காலை 11:30 மணியளவில் கொச்சி கடவந்திரி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இருந்து இரிஞ்ஞாலக்குடா டவுன்ஹாலுக்கு மவுன ஊர்வலமாக சடலத்தை எடுத்துச் சென்றனர். அங்கு அதிகாலை 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சடலம் அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் செவ்வாய் காலை வரை வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.