tamilnadu

img

எனக்கு ரொம்பப் பிடிச்ச சட்டை அது - சாதிக்

2014ல 1000 ரூபாய்க்கு அவசரத்தில மதுரையில எடுத்த சட்டை. 1000 ரூபாய்னா ஆயிரம் ரூபாயே இல்ல, கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஒரு குத்து மதிப்பா சொல்றது தானே பாஸ்  நம்ம ஸ்டைலு. அதாவது மறதி தான் காரணம்னு  சொல்லாம சுத்தி வளச்சி மூக்கத் தொடுறது தான். எல்லாம் ஒரு எஸ்கேப்பிசம் தான் நண்பர்களே.  கல்லூரி நண்பர்கள் 30 வருடம் கழிச்சி சந்திக்கிற ரியூனினுக்காக எடுத்ததுனு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் வயச  கணக்கு பண்றதில நீங்கள்லாம் ராமானுஜத்திற்கு அண்ணங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எவ்வளவு காலம் குப்பை கொட்டி இருக்கேன் உங்களோட. காலேஜ் படிக்கும் போது நண்பனொருவன் கழுத்து பட்டனையும் போட்டுக்கிட்டு டை கட்டுற ஸ்டைல தான் வருவான். அவன் என்ன டானா இன்னக்கு வயல்ல வேலை பாத்துக் கிட்டு இருக்கான் சட்டைய வரப்பு ஓரமா சுருட்டி  வச்சிட்டு. “ஆனா சட்டையில ரெண்டு பட்டன  மாட்டாம காலேஜ் வந்தவன், இன்னக்கி கழுத்து பட்டன் வரைக்கும் முழி பிதுங்குற மாதிரி  மாட்டிக்கிட்டு, டை கட்டி எங்கோ ஐஏஎஸ் ஆபீசரா இருக்கானு”  அடுத்து இதத்  தான் இவன் சொல்லப் போறானு எதிர்பாத்தீங்கனா அப்படி எவனும் இல்லங்க. ஆனா காலேஜ் சர்ட்டிபிகேட்ட தொலச்சவன் ஒருத்தன் அதப்  பத்தி கவலப்படாம சொந்தமா மூணு காலேஜ்  நடத்துறான்டா பாத்துக்குங்க. சில பேருக்கு படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லனு காலம் பாடம் நடத்திட்டு போய்க்கிட்டே இருக்கு. பிராண்டட் கம்பெனி சட்டை எடுத்ததால ரொம்ப வசதியான பார்ட்டினு நினக்காதீங்க. அப்பப்ப எட்டிப் பாக்கும்  அப்பர் கிளாஸ் மனச இப்படித் தான் தாஜா பண்றது. (ஆயிரம்  ரூபா சட்டை எல்லாம் அப்பர் கிளாசானு நீங்க  முணுமுணுத்தா, லோயர் மிடில் கிளாஸ் மாதிரி நீங்கள்லாம் லோயர் அப்பர் கிளாசா இருக்கலாம்).  மனசு நாய் மாதிரி பின்னாடி வரணும்னா அப்பப்ப இப்படித்தான் ஏதாவது பிஸ்கட் போடணும். இல்லாட்டி காலைல வாக்கிங் போற வசதியான பார்ட்டி மாதிரி நாய் பின்னாடியே சங்கிலிய புடிச்சிகிட்டே ஓடனும்.

அந்தச் சட்டை ரொம்ப சாப்ட்டா,  அதாவது  சட்டை போட்ட மாதிரியே தெரியாது. எனக்கு  மட்டுமல்ல நிறையப் பேருக்கு இப்படியான சாப்ட்டா இருக்குற சட்டை தான் புடிக்கும்னு நண்பர்கள் பேசுறப்ப புரிஞ்சிகிட்டேன். சில சட்டை பேண்ட் எல்லாம் நல்ல விலைக்கி எடுத்தாலும் போட்டவுடனே ஏதோ குத்துற மாதிரி தெரியுமா, அப்பறம் அதப் போடறதே இல்ல. அப்பறம் பத்தாம போச்சினு நாமளே சமாதானமாகி பிளாஸ்டிக் வாளிக்கோ அல்லது யாசகருக்கோ கொடுத்துட்டு ரொம்பப் பெருமையா நம்மள நாமே தட்டிக் கொடுத்து மெச்சிக்கிறதெல்லாம் நீங்க ஓவர்னு  நினக்க மாட்டீங்க. ஏன்னா நீங்களும் நம்ம ரகம்னு எனக்கு நல்லாவே தெரியும் பாஸ். ஆனா ஒரு சட்டை புடிச்சிப் போச்சினா, போச்சிடா செத்தான்டா எதிரி, ஓடுற நாய தொரத்தித் தொரத்தி அடிக்கிற மாதிரி அதையே அடிக்கடிப் போட்டா என்ன ஆகும்?  இவனுக்கு வேற சட்டையே இல்லையானு அடுத்தவங்க நினக்கிறத தூரமா கடாசிட்டு, ஏங்க அடிக்கடி இதையே போடறீங்கனு பொண்டாட்டி சொல்றத காதில வாங்காம (என்னக்கி பொண்டாட்டி பேச்ச கேட்டோம்? கேக்குற மாதிரி ஆக்ட்ட கொடுக்குறதுல தானே தாம்பத்யம் ஓடுது) இருந்தா அந்தச் சட்டை என்ன ஆகும். என்ன காலர் தான் கிழிஞ்சி போகும். காலர் கிழிஞ்சாலும் மவனே அத விடுறதில்ல. மறுபடியும், மறுபடியும் (இது  சொல் பொருள் பின்வருநிலை அணிதானே? இப்படித்தான் சம்பந்தம் , சம்பந்தம் இல்லாம  எதையாவது ஏன் பேசுறன்னா நம்மளோட மேதாவித் தனத்த காட்டுறேனு தத்து பித்து ஏதாவது சொல்லணும், அது சரியா தப்பானு  அடுத்தவன் தலயப் பிச்சிட்டுப் போகட்டுமே. நமக்கு என்ன குடியா மூழ்கப் போகுது?)  அந்த சட்டைய போடுறது.

ஒரு கட்டத்துல இதுக்கு மேலே கிழிஞ்ச போன காலரப் போட்டா ரொம்ப அசிங்கமாப் போயிருமே, தூக்கிப் போட்றலாம்னு நினச்சப்ப தான் நம்ம மூளை அபரிமிதமா வேலை செஞ்சது. நம்ம மூளைய நாமெல்லாம்  இரண்டு சதவீதம் தான் பயன் படுத்துறோம்னு  படிச்ச ஞாபகம். நானெல்லாம் ஒரு சதவீத மாவது அதைப் பயன்படுத்த வேணாமா?  ஆமா  ஒரு சந்தேகம். அப்ப மீதி 98 சதவீதம் மூளையா ஒரு சுமையா சும்மாக் காச்சிக்கும் தூக்கிட்டு அலையுறமா? என்ன கருமமோ அத மூளை  சமாச்சாரத்த விடுங்க. நமக்குச் சம்பந்த பில்லாத மூளையப் பத்தி என்ன பேச்சு இப்ப.  நல்லாக் கவனிங்க, “நமக்குச் சம்பந்தமிலா மனு” உங்களையும் சேத்து தான் சொல்றேன். ஆனா அந்த மூளைப் பொரியல் நல்லாத்தான் இருக்கும் கொஞ்சம் உப்பும் ஒரப்புமா முனியாண்டி விலாஸ் ஹோட்டல்ல. ஆனா என்ன எனக்கு ஒரே வருத்தம்னா அந்த ஓனரு முனியாண்டிய எந்த ஓட்டலயும் போட்டாவாக் கூட பாத்ததில்ல. இப்ப அந்த காலர் கிழிஞ்சி போன சட்டைய, ஈ ஓட்டுற டைலர்ட்டே கொடுத்து காலரப் பிரிச்சி  கிழிஞ்சி போன பகுதி உள்ளே போகுற மாதிரி இடவல மாற்றம் செஞ்சி தக்கச் சொன்னேன் பாருங்க, டைலர் மிரண்டு போயிட்டாரு. சார்  ஏதோ கிழிஞ்சி போனதச் தச்சிக் கொடுப்பேன், ஆனா இந்த மாதிரி எல்லாம் கோக்கு மாக்கு வேலை எல்லாம் பாத்ததில்லனு சொல்லி என்னோட அறிவு ஜீவித் தனத்த பாராட்டுன முதல் ஆள (கடைசி ஆளும் அவராத் தான்  இருக்கப் போற எதிர்கால உண்மைய நீங்களும் யார் கிட்டயும் சொல்லாதீங்க.) நினச்சி நான்தான் பெருமை பட்டுக்கணும். பின்ன என்ன நீங்களா மேடை போட்டு எனக்குப் பாராட்டு விழா நடத்தப் போறீங்க?  ஆனாப் பாருங்க. காலர இடவல மாற்றம்  செய்ததில ஒரு சின்ன பிரச்சனை. காலரோட காஜாவும், பட்டன் இருக்குற பக்கமும் எதிர்ப்  பக்கம் மாறிப் போச்சு. ஆனா அது எனக்கு மட்டுமே தெரிஞ்சதால, பட்டன மட்டும் கட்  பண்ணிட்டு மறுபடியும் வழக்கம் போல அந்தச் சட்டைய போடுறது, துவைப்பது, உடனே மறுபடியிம்னு நான் எனது வேலையக் காட்ட ஆரம்பிச்சிட்டேன் நண்பர்களே. அந்த சட்டைக்கு வாய் இருந்தா அழுதுரும்னு யாராவது சொன்னா, அதுக்குத்தான் நாம ரெடிமேடா ஒரு பதில் வச்சிருக்கமே , சட்டைக்குத் தான் தலையே இல்லையே, பின்ன கண்ணுக்கும் வாய்க்கும் எங்கே போறதாம்னு?

அதாவது நண்பர்களே.. நான் என்ன சொல்ல வர்ரேன்னா... ஒரு நடுத்தர வர்க்க ஆடை என்பது அது எது வரை அணியப் பட வேண்டும் என்பதை அந்த  ஆடை முடிவு செய்வதில்லை, அது கிழிந்து போன நிலையிலும் கூட. அந்த ஆடையைப் போன்றே இன்னொரு, கொஞ்சம் விலை உயர்ந்த ஆடை வாங்க இயலாத பட்ஜெட் பரந்தாமனெல்லாம் இந்த  மாதிரி ஏதோ ஒரு மாற்றத்தில் , காலாவதியாகிப் போன எந்த ஒன்றையும் அதன் ஆயுளை நீட்டிப்புச் செய்யும் சர்வ வல்லமையை அவனது பொருளாதாரம் உருவாக்கும் நண்பர்களே.  அது ஆடையாக இருக்க வேண்டுமென்பதில்லை, மாறாக வாழ்க்கையாக இருக்கிறது என்பது அந்தக்  காலரின் கிழிந்த பகுதி உள்ளே மறைந்திருப் பதை மட்டுமல்ல, இடவல மாற்றத்தின் எதார்த்தம் ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் வழக்கமாக நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும் எனபதை சுட்டும் குறியீடாகவும் அந்த ஆடை இருக்கிறது நண்பர்களே.