tamilnadu

img

இந்தியா கூட்டணியிலேயே நூறு சதவீதம் வெற்றி பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான்!

அரியலூர், ஜூலை 19 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.  பின்னர் அவர் பேசுகையில், “இந்தியா கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் நூற்றுக்கு நூறு வெற்றியை மக்கள் தந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்த கட்சியும் அந்தந்த மாநிலங்களில் நூறு சதவீதம் வெற்றி பெறவில்லை. மேற்குவங்கமோ, உத்தரப்பிரதேசமோ, பீகாரோ, மகாராஷ்டிரா அல்லது கேரளா உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் நூறு சதவீத வெற்றி கிடைக்கவில்லை.  ஆனால் தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி” என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.