சென்னை, மே 16 - கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. இதையொட்டி, பாஜக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும், இனி பாஜக-விற்கு தோல்விதான் என்றும் அரசியல் தலைவர்கள் துவங்கி ஊடகங்கள் வரை கூறி வருகின்றன. ஆனால், இந்த செய்திகள், பாஜக கடந்த 7 ஆண்டுகளில் தோல்வியே காணாத கட்சி போலவும், இப்போதுதான் தோற்றிருக்கிறது என்பது போலவும் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த பின்னணியில், இந்த 7 ஆண்டுகளில் பெற்ற தோல்வி குறித்து, “கொஞ்சம் டைம் எடுங்க .. நம்புங்க ..
அதிர்ச்சி அடைவீங்க..!”என்ற தலைப்பில் வெளியான செய்தியை, முகநூல் பதிவர் ஒருவர் எடுத்தாண்டுள்ளார். “இமாச்சல் தோல்வி; ஜார்கண்ட் தோல்வி; ஒடிசா தோல்வி; சத்தீஸ்கர் தோல்வி; மேற்கு வங்கம் தோல்வி; தெலுங்கானா தோல்வி; ஆந்திரா தோல்வி; ராஜஸ்தான் தோல்வி; கேரளா தோல்வி; தமிழ்நாடு தோல்வி; பீகார் தோல்வி; சிக்கிம் தோல்வி; பஞ்சாப் தோல்வி (இரண்டு முறை); தில்லி தோல்வி (இரண்டு முறை); மத்திய பிரதேசம் தோல்வி (திருட்டுத்தனமாக ஆட்சி); மேகாலயாவில் தோல்வி (குதிரை பேரத்தில் ஆட்சி); கர்நாடகத்தில் (மூன்று முறை தோற்றுவிட்டு இரண்டு முறை குதிரை பேரத்தில் ஆட்சி); மிஜோரம் தோல்வி (குதிரை பேரத்தில் ஆட்சி); நாகாலாந்தில் தோல்வி (எதிர்க்கட்சிகளை மிரட்டி ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி); மகாராஷ்டிராவில் தோல்வி (பின்பு ஜனநாயகத்தை படுகொலை செய்து ஆட்சி).. இந்த பட்டியல் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது இல்லையா..?? ஆனால் இதுதான் உண்மை. உண்மை இவ்வாறிருக்க தொடர்ந்து இவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற வெற்று பிம்பத்தை ஊதி ஊதி பெரிசாக்குகிறார்கள் பாஜக ஆதரவு ஊடகங்கள்!!!” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை, பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் அந்த முகநூல் பதிவரின் பெயரைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ‘கலைஞர் செய்திகள்’ உருவாக்கிய வரைபடத்தையும் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்து கொண்டுள்ளார்.