தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல்
ஞ்சாவூர், மே 15- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்ணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முதுகலை பாட பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் மருத்துவர் பெ.பாரதஜோதி, பதிவாளர்(பொ) கோ. பன்னீர்செல்வம், துணைவேந்தர் செயலக நேர்முக உதவியாளர் அ.செந்தில்குமார், சேர்க்கைப்பிரிவின் கண்காணிப்பாளர் முனைவர் சி.பஞ்சநாதன் உதவியாளர்கள் கவி. க. கயல்விழி, ரா. அமுதா, தேர்வுப்பிரிவு உதவியாளர் த இரா.கஸ்தூரி, அலுவலக உதவியாளர்கள் அ.ரேகா, சு. சுவாதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு விசாரணை முகாம்
பெரம்பலூர், மே 15- பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந் தோறும் புதன்கிழமை நடைபெறும் காவல்துறையினரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விசாரித்தார். முகாமில் மொத்தம் பெறப்பட்ட 36 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
தஞ்சாவூர், மே 15- ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள நடுப்படுகையைச் சேர்ந்தவர் சிவக்குமார் என்கிற பெரியன்(50). இவர் 6 வயது சிறுமிக்கு 2023, ஜூலை 19 ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து சிவக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
அரியலூரில்
அரியலூர், மே 15- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் கல்லூரி கனவு 2025, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா தலைமை வகித்து, உயர்கல்வி முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள் குறித்தும் பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி கனவு திட்டத்தின் கீழ், அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த உயர்கல்வி வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன் வரவேற்றார்.