தக்கலையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பெண் உரிமை சிறப்பு மாநாட்டில் பெண் போராளிகளும் சாதனையாளர்களும் பாராட்டப்பட்டனர். அவர்களை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி அறிமுகம் செய்தார். அப்போது அந்த பெண்கள் அனுபவித்த துயரங்களை கண்ணீர் மல்க மேடையில் பகிர்ந்தார்கள்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளான மாற்றுத்திறனாளி சிறுமி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் பேசுகையில், கடந்த 2022 மே மாதம் என்னுடைய 14 வயது மாற்றுத்திறனாளி குழந்தை பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். வழக்கு தொடுத்தபோது மிரட்டினார்கள். ஆனாலும் நான் தைரியமாக நின்றேன். நான்கு ஊர் நான் மாறினேன். கத்தி வைத்து எல்லாம் மிரட்டினார்கள். மாதர் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கடைசி வரை பக்க பலமாக இருந்து உதவினார்கள். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. என் குழந்தைக்கு நீதி கிடைத்தது. இந்த நேரத்தில் மாதர் சங்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கொத்தடிமையில் இருந்து 10 இருளர் குடும்பங்கள் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் உள்ள தையூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக வைத்திருந்த 10 இருளர் சமூக குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளன. அதில் பாதிக்கப்பட்ட நாகவல்லி கூறியதாவது : எங்கள் ஊரில் 10 இருளர் குடும்பத்தினரை கொத்தடிமைகளாக வைத்திருந்த பாலு என்பவர் பெண்களை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்தார். 15,000 ரூபாய் முன்பணமாக கொடுத்து விட்டு தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை செய்ய வைத்தார். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூலி கொடுத்தார். இந்த கொத்தடிமைத்தனம் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இருப்பினும் பாலுவை காவல்துறை கைது செய்யவில்லை. நான் இந்த மேடையில் இருக்கும்போதே எனது கணவரை அழைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்று நா தழுதழுக்க கேட்டுக் கொண்டார். அவரை அழைத்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தார்.
திராவகம் வீசி குடும்ப வன்முறை
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட பிரித்திகா என்ற பெண்ணின் தாய் பேசிய போது, என்னுடைய மகள் மீது அவளது மாமியார் அமிலம் வீசினார். குடும்ப வன்முறை வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருவரை தவிர வேறு யாரையும் இன்னும் கைது செய்ய வில்லை. உறவுகள் யாரும் உதவ வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்க மும் தான் உதவின என தெரிவித்து நன்றி கூறினார்.
நுண்கடன் வலையில் இருந்து மீட்பு
நுண்கடன் நிதி நிறுவனங்களால் துன்புறுத்த லுக்கு உள்ளாகி வேலூர் மாவட்டத்தில் மட்டும் 13 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அது தொடர்பான வழக்கை நடத்தியது குறித்து தெரிவித்த பி.சுகந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் நுண்கடன் வலைக்குள் சிக்கித்தவிக்கும் லதாவை அறிமுகம் செய்தார்.
அரசுப் பேருந்தின் முதல் பெண் ஓட்டுநர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் முதல் பெண் ஓட்டுநராக பணியாற்றி 24 ஆண்டுகளை நிறைவு செய்து ஓய்வு பெற்றிருப்பவர் வசந்த குமாரி. ஆசியாவின் 7 நாடுகளின் பாராட்டை பெற்றுள்ள இவரை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி அறிமுகம் செய்தார். அவருக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.