tamilnadu

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலவரையற்ற உண்ணாநிலை

சென்னை, டிச. 28- தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்டமன்ற தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கோரி ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாநிலை நிலைப் போராட்டம் நடத்தப் போவதாக பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் பி.இரத்தின சபாபதி, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ்  கஜேந்திரபாபு ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசுக்குரிய மாணவர் சேர்க்கை இடங்களிலும், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021 செப்டம்பரில் அனுப்பியுள்ளது. 3  மாதங்கள் முடிந்தும் ஆளுநர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அதற்கு  ஒப்புதல் அளிப்பது,

குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைப்பது அல்லது தமது  கருத்துடன் மீண்டும் சட்டப்பேரவை பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டிருக்கவேண்டும். அதை அவர் செய்யவில்லை.   ஒன்றிய அரசு இயற்றும் சட்டம் ஒரு மாநிலத்தின் தேவையை அதன் தன்மைக்கு ஏற்றவாறு நிறைவேற்றவில்லை என்றால், மாநில அரசு அந்த மாநில மக்களின் நலன் கருதி ஒரு சட்ட முன்வடிவை இயற்றலாம். அவ்வாறு மாநில சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்ட முன்வடிவிற்கு குடியர சுத் தலைவர் ஒப்புதல் பெற வாய்ப்பளித் திடும் வகையில் ஒப்பிசைவு பட்டியல் அமைந்துள்ளது.  தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புத லுக்கு ஆளுநர் விரைந்து அனுப்ப வேண்டும்  என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்துகிறது. மேலும் ஒன்றிய அரசு அரசியலமைப்பு மாண்பையும், கூட்டாட்சி தத்துவத்தையும் மதிக்கிறது என்றால் உடனடியாக குடியரசுத்தலைவரிடம் இதற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும்.  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2022 ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் மக்கள்  சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்றும், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரை யற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.