tamilnadu

img

போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் திருமண கோலத்துடன் கையெழுத்திட்ட தம்பதிகள்

மயிலாடுதுறை, பிப்.13- கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்றிட வேண்டும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, போதை கலாச்சாரத்தால் சீரழியும் மாணவர்கள், இளைஞர்களை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிப்ரவரி 12 முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகள் பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கார்த்திகேசன் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஐயப்பன் கையெழுத்து இயக்க த்தை துவக்கி வைத்தார். திருக்கடையூரில் உள்ள வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.  இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் செல்வேந்தி ரன் -இந்திரா ஆகிய இருவரிடமும் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் குறித்து கூறியவுடன் ஆர்வமுடன் கையெழுத்திட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சமூக அக்கறைக்கொண்ட  பெருமுயற்சி வெற்றிபெற ஆதரவளிப்பதாக கூறினர். 

திருவாரூர் 

திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே திங்களன்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பங்கேற்று போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.