சென்னை,ஏப்.8- கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடுகள், மோசடிகள் குறித்து விசாரிக்க விரைவில் தனி சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். சட்டப்பேரவையில் வெள்ளி யன்று(ஏப்.8) கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களான தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்”என்றார். அப்போது குறுக்கிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் “ அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 780 சங்கங்க ளில் ரூ.482 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் தனது மனைவியின் பெயரில் ரூ.14 கோடிக்கு கடன் பெற்றிருக்கிறார். அது அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடந்து இருக்கும். மதுரை மாவட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதே போல அனைத்து மாவட்டங்களிலும் நடந்த முறைகேடு தொடர்பான பட்டியலும் உள்ளது. எனவே கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்க விரைவில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.