செல்வம் கல்லூரிக்குச் செல்லாமல் தன்னுடைய நண்பர்களோடு பூம்புகார் சென்றிருந்தான்.அன்றைக்கு ஆடி அமாவாசை. பூம்புகார் கடற்கரை கலைகட்டியிருந்தது. கடற்கரைக் காட்சிகளை வேடிக்கை பார்த்தவாறே நடந்தனர்.
“சந்துரு எங்கடா? நம்மகூடத்தான வந்தான்.எங்க போனான்னு தெரியலியே” மணி கேட்டுக் கொண்டிருக்கும்போது தொலைவில் சந்துரு வருவது தெரிந்தது.அருகே வந்தவனிடம்.”திடீர்னு எங்கடா போன?”என்றான் செல்வம்.
“டேய் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.அதோ அங்கே நிக்குதே அந்த படகில கடலுக்கு உள்ளாறப் போகப்போறோம். தலைக்கு ஐந்து ரூபாயாம். பேசிட்டேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி படகை நோக்கி நடந்தார்கள்.
படகுக்காரர் இன்னொருவர் துணையோடு படகை இழுத்து கடலில் இறக்கிவிட்டு எல்லோரையும் ஏறச்சொன்னார்.”தம்பிகளா நீங்க ஆசைப்படுறீங்கன்னு ஒத்துகிட்டேன்.
நீங்க யாரும் படகிலே எழுந்து நிற்கக் கூடாது.அங்கேயும் இங்கேயும் நகரக்கூடாது.முக்கியமா கடலில் குதிக்கக்கூடாது சரியா?”என்றார். ”சரிங்க”என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்
உயரமாக எழுந்து வரும் அலைகளின் மேல் படகு செல்லும் போது பயம் கலந்த மகிழ்ச்சியில் ஓ...என்று ஆரவாரம் செய்தனர் .அலை எழுந்து எல்லோருடைய ஆடைகளையும் நனைத்தது. கடற்கரையை விட்டு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குப் படகு சென்றுவிட்டது.
அடக்கமாக இருந்த சந்துரு தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்தான். அலையின்றி அமைதியாய் இருக்கும் கடலில் திடீரென குதித்தான்.பார்த்த எல்லோரும் குதிக்க ஆரம்பித்தார்கள்.படகுக்காரார் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
குதித்த சந்துருவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.இந்த இடத்தில் கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும்.மனத்தில் நினைத்தவன் ஆழத்தைப் பார்க்க அடியிலே செல்ல ஆரம்பித்தான்.
தரையை நோக்கிச் செல்லச் செல்ல தரை தென்படவில்லை.பயம் வந்துவிட்டது.இனி கீழே செல்லாமல் மேலே போய்விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் மேல்நோக்கி வர ஆரம்பித்தான்.
அதிக ஆழத்திற்குச் சென்று விட்டதால் ஒரு கட்டத்தில் மூச்சை அடக்க முடியவில்லை.உப்புத் தண்ணீரை வயிறு முட்டக் குடித்துவிட்டான்.இன்றைக்கு நம் உயிர் இந்தக் கடலில் போகப் போகிறது என்று நினைக்கும் போது நல்லவேளையாக கடலின் மேற்பகுதிக்கு வந்துவிட்டான்.
கை,கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.மெதுவாகப் படகைப் பிடித்து உள்ளே விழுந்தான்.”டேய்..என்ன ஆச்சு” செல்வம் கேட்கும்போதே குடித்த கடல் நீரை வாந்தி எடுத்தான்.உயிரோடு இருக்கிறோம் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை.கரைக்கு வந்தவுடன் நடந்ததை எல்லாம் நண்பர்களிடம் சொன்னான்.
எழுபது வயதாகியும் சந்துரு இப்போதும் கடற்கரைக்குச் சென்றால் கரையில் நின்று பார்ப்பானே தவிர அலையில்கூட கால் நனைக்க மாட்டான்.நான் பட்ட மோசமான அனுபவத்தை நீங்களும் பெற வேண்டாம் என்று யாரைப் பார்த்தாலும் சொல்லிக் கொண்டிருப்பான்!