tamilnadu

img

திட்டாணிமுட்டம் ஸ்ரீ கூத்தையனார் கோவில் முன்பு சம உரிமை கோரி பட்டியலின மக்கள் போராட்டம்

திட்டாணிமுட்டம் ஸ்ரீ கூத்தையனார் கோவில் முன்பு  சம உரிமை கோரி பட்டியலின மக்கள் போராட்டம்

கோட்டாட்சியர் முன்பு ஜுன் 12 இல் பேச்சுவார்த்தை 

மன்னார்குடி, ஜுன் 9-  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வருவாய் வட்டம், முசிரியம் ஊராட்சிக்குட்பட்ட திட்டாணி முட்டம் கிராமத்தில் ஸ்ரீ கூத்தையனார் கோவில் உள்ளது. ஊருக்கு பொதுவான இக்கோவில் நிர்வாகத்தில் பட்டியலின மக்களும்   பங்கேற்க, தொடர்ச்சியாக 5 ஆண்டு காலமாக பட்டியலின மக்களால்   கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.  ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேரந்தவர்கள், இக்கோரிக்கையை மறுத்து வந்தனர். இந்நிலையில் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பூசைகள் திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்தது. இந்நிலையில், காலையிலிருந்து பட்டியலின மக்கள் கோவில் முன்பு கூடத் தொடங்கினர்.  கிராம கோவிலின் நிர்வாகத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த பிரச்சனை தீரும் வரையில் கோவிலை விட்டு அகல்வதில்லை என்று நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு அமர்ந்தும் கோவிலைச் சுற்றி நின்று கொண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர், கூத்தாநல்லூர் வருவாய் வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோருக்கும் போராட்டக்காரர்களால் தகவல்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, கொரடாச்சேரி கூத்தாநல்லூர் காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், வருவாய் வட்டாட்சியர் எஸ். வசுமதி திட்டாணிமூட்டம் கிராமத்திற்கு வந்து, கோவில் முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ஏ. சிவக்குமார், தனி வருவாய் வட்டாட்சியர் எம். நக்கீரன், துணை வட்டாட்சியர் ப. ஜோதிபாசு உள்ளிட்ட  வருவாய் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  கோவில் நிர்வாகத்தில் சம பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பட்டியலின் மக்கள் சார்பாக, கிராமத் தலைவர் ஆர். செல்வராஜ், கிராமச் செயலாளர் எம். சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே. சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.லோகநாதன், கட்சிக் கிளைச் செயலாளர் கே. ஜெயபால் ஆகியோரும், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினைச் சார்ந்த அமைப்பின் செயலாளர் கே. கோவிந்தராஜ், தலைவர் ஆர். மதியழகன், எம். சாமிநாதன், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.  பேச்சு வார்த்தையின் முடிவில், கூத்தாநல்லூர் வருவாய் வட்டாட்சியர் எஸ். வசுமதி, ஜுன் 12 (வியாழக்கிழமை) அன்று, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரையில் அமைதிக்க காக்க வேண்டும் எனவும்   அறிவித்தார். அதன் அடிப்படையில், திட்டாணி முட்டம் கிராமத்தின் பட்டியலின மக்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.