tamilnadu

img

சதி லீலாவதி கதைத் திருட்டு வழக்கைச் சந்தித்த முதல் தமிழ் சினிமா... புதையல்

தமிழ் சினிமாவுக்குக் கதைக் களவு என்பது புதிதில்லைதான். ஆனால், ஒரே கதையமைப்பில் வெளிவந்த இரண்டு படங்களால் ஏற்பட்ட பிரச்சனை முதன்முதலில் வழக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற வரலாற்றுச் சம்பவம் 1930 களில் நடந்தது. கதைத் திருட்டு வழக்கைச் சந்தித்த முதல் தமிழ் சினிமா 1936இல் வெளிவந்த சதி லீலாவதி படம்தான்.  அதே சமயத்தில் வெளிவந்த இன்னொரு படம் பதிபக்தி. அதன் தயாரிப்பாளர்தான் சதி லீலாவதி படத்தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடுத்தார். அதற்குக் காரணம் இரண்டு படங்களின் கதைகளுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்ததுதான்.  தமிழ் சினிமா பேசத் தொடங்கிய துவக்க காலத்திலேயே பலவகைகளிலும் புகழ் பெற்ற படமாக இருந்தது இந்த சதி லீலாவதி. இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கு முதல் படம். அவர் இதில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அதுவும் வில்லனுக்குத் துணைபோகும் போலீஸ்காரர் வேடம். அந்த வேடமும் எம்.கே.ராதாவின் கடும் முயற்சி யினால்தான் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது.

படத்தின் நாயகன் எம்.கே.ராதாவுக்கும் இதுதான் முதல் படம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் இந்த சதி லீலாவதிதான் முதல் படம். முதல் படம் என்பது  மட்டுமல்ல. நகைச்சுவைக் காட்சியைத் தான் சொல்கிறபடி தான் எடுக்க வேண்டும். அதன் உள்ளடக்கத்தை நான்தான்  தீர்மானிப்பேன் என்று தைரியமாகக் குரல் கொடுத்து, அதையொரு உரிமைபோல பெற்றார் கலைவாணர். அதுவும் தன்னை அறிமுகம் செய்துவைக்கப்போகிற சதி  லீலாவதி எனும் இந்த முதல் படத்திலேயே. அந்தத் துணிச்சல்தான் கலைவாணரின் தனித்துவ நகைச்சுவை யின் வெற்றிக்கு வித்திட்டது. பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவுக்கும் இந்த சதி லீலாவதிதான் முதல் படம். தமிழ் சினிமாவில் பல புதுமைகளை அறிமுகம் செய்தவர் அற்புத இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். அவர் இயக்கிய முதல் படமும் இந்த சதி லீலாவதிதான். மீரா உள்ளிட்ட பல கலையம்சம் கொண்ட பல படங்களை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன். அமெரிக்கரான அவருக்குக் கடைசிவரையில் தமிழில் ஒரு சொல்கூடத் தெரியாது என்பது இன்னொரு வியப்பு.

ஆனந்த விகடனில் அதன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் தொடராக எழுதிவந்த கதையைத் தழுவித்தான் சதி லீலாவதி உருவானது. அதனோடு வழக்குக்கு வந்த பதிபக்தியோ நூற்றுக்கணக்கான மேடைகளைக் கண்ட நாடகமாகும். புராணக் கதைகளையே மேடையேற்றிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை வைத்து சிலரே நாடகங்களை எழுதினார்கள். அவர்களுள் முக்கியமானவர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர்.  தமிழாசிரியர், பாடநூல் ஆசிரியர், பத்திரிகை யாளர், கதாசிரியர், நாடக இயக்குநர், நடிகர் என்று பல பரி மாணங்களைக் கொண்டவர்தான் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். சதாவதனியான பாவலர் தேசிய இயக்கத்திலும் பங்கெடுத்தவர். கதரின் வெற்றி எனும் நாடகத்தையும் உரு வாக்கி மேடையேற்றியவர் அவர். அவர் எழுதிய நாடகமான பதிபக்தியை மேடையேற்றியதோடு ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். தனது 44ஆவது வயதில், 1934ல்  மரணத்தைத் தழுவினார் பாவலர். ஆனால் அவரது பதிபக்தி நாடகத்தை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி தொடர்ந்து நடத்திவந்தது.

பிரபல நாடக ஆசான் எம்.கந்தசாமி முதலியார் அதனை மேடையேற்றி நடத்திவந்த சமயத்தில்தான் அதைப் படமாக்கப்படுகிற முயற்சி நடந்தது. நேஷனல் மூவிடோன் ஸ்டூடியோவின் அதிபர் சிதம்பரம் செட்டியார் படமாக எடுத்தார். நாடகத்தில் கந்தசாமியின் மகனான எம்.கே.ராதாதான் நாயகன். ஆனால், படத்திலோ அவருக்கு பதிலாக கே.பி.கேசவன் நடித்தார். அதனால் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாருக்கு பெரிய வருத்தம் உண்டானது.  அப்போதுதான் பதிபக்தியைப் போன்ற கதை யமைப்பைக் கொண்ட சதி லீலாவதி கவனத்திற்கு வந்தது.  அதனைப் படமாக எடுக்க தயாரிப்பாளர் ஏ.என்.மருதாசல  செட்டியார் வந்து சேர்ந்தார். பதிபக்தியிலும் சதி லீலாவதி யிலும் குடிக்கு அடிமையாகும் கதையின் நாயகர்கள்  தீய வழிகளில் சென்று குடும்பத்தை வறுமையில் தள்ளு கிறார்கள். கொலைப் பழி வந்ததாகத் தவறாக எண்ணி நாட்டை விட்டே ஓடுகிறார்கள். தனது நண்பனோடு தனது மனைவியை இணைத்து சந்தேகப்பட்டுப் பழி சுமத்து கின்றனர். கணவனின் மேலுள்ள தீராத பக்தியினால் - பற்றினால் எல்லாத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு, குழந்தைகளுடன் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் இரண்டு கதைகளிலும் மனைவிமார்கள். அப்புறம் என்ன? இறுதியில் வழக்கம்போல கதாநாயகன் மனந்திருந்த இரண்டு படங்களும் சுபமாக முடிகின்றன.   

தனது மகன் எம்.கே.ராதாவுக்கு வாய்ப்பு தராத பதிபக்தி யின் பக்கம் நிற்கவில்லை எம்.கந்தசாமி முதலியார். அவர் தனது மகனை நாயகனாக்கிய சதி லீலாவதி சார்பாகவே நின்றார். ஆனந்த விகடன் ஆசிரியர் ஸ்ரீமான் எஸ்.எஸ். வாசன் விகடனில் தொடராக எழுதிவந்த கதையைத் தழுவிய படம் என்ற விளம்பரம் ரசிகர்களைக் கவர்ந்தது. ஒரே விதமான கதையமைப்பைக் கொண்ட படங்கள் என்றாலும் இரண்டையுமே ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்கள். இரண்டையுமே வெற்றிபெறச் செய்தார்கள்.  இருந்தபோதிலும் 1934இல் எடுக்கப்பட்ட சதி லீலாவதி வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் தாமதமாக 1936இல்தான் வெளிவந்தது. அதுசரி, அந்த வழக்கின் தீர்ப்பு  என்னவாக இருந்தது தெரியுமா? பிரபல பெண் நாவலா சிரியர் ஹென்றி வுட் எழுதிய டேன்ஸ்பரி ஹெளஸ் நாவ லைத் தழுவியே இரண்டு கதைகளும் அமைக்கப்பட்டிருக் கின்றன என்றொரு வாதம் நீதிமன்றத்தில் முன்வைக்கப் பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு தள்ளுபடியானது.  படத்தைப் பார்த்த ராஜாஜி குடிப்பழக்கத்திற்கு எதிராகப் படம் பிரச்சாரம் செய்வதாகப் பாராட்டினாராம். அத்துடன் விடவில்லையாம் அவர். படத்தில் வரும் ராட்டை நூற்பதுபோன்ற காட்சியில் பஞ்சை வைத்துக்கொண்டு நூல் நூற்காமல் ஒரு நூலை வைத்தே நூல் நூற்பதாகத் தவறாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினாராம். கதையே ஹென்றிவுட் நூற்றதுதானே என்று அப்போது எவரும் சொன்னார்களோ இல்லையோ.