“சந்தனம், தேக்கு மரங்களுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டியது பனை மரம். ஏன்? நமது பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று பனைமரம் ! தமிழ்நாட்டில் தான் பனை மரங்கள் அதிகம் உள்ளன. ஒரு காலத்தில் ஏரிக்கரை தொடங்கி வீட்டுக் கூரை வரை பனைமரம் தனக்கென்று தனி இடத்தையே பிடித்திருந்தது. சுனாமி தாக்கிய போதும் சாயாத ஒரே மரம் பனை மரம் தான். தொன்றுதொட்டு தமிழரின் வாழ்வோடு இணைந்து பல பயன்களை அளித்து வருவது பனை மரம்”
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீ வைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் பனை மரக் காடுகள் அதிக அளவில் காணப்பட்டன. பனை மரங்களை கடந்த சில ஆண்டுகளாகவே காண்பது அரிதாகிவிட்டது. தற்போது அவை குறைந்தும் விட்டன. இந்நிலையில், அண்மையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “ மாநிலம் முழுவதும் 76 லட்சம் பனை விதையும் 1 லட்சம் கன்றும் முழு மானியத்தில் கொடுக்கப்படும்” என்று கூறியதும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகள் அரசுக்கு இலவசமாக கொடுப்பதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்ததை அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக, பனை மரத்தின் சிறப்பை விளக்கும் “நெட்டே நெட்டே பனை மரமே” என்ற காலப்பேழை புத்தகத்தை 2023 ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறை தயா ரித்தது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார். இந்த காலப் பேழை, நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. படங்களும் தகவல் களும் உறுப்பினர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தன.
பனையின் வரலாறு!
பனையின் தாயகம் ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. எனினும் பாரசீக வளைகுடாவில் இருந்து கம்போடியா, நைஜீரியா, வியட்நாம் எல்லை வரைக்கும். தன்னிச்சையாக வளர்கிறது. அத்துடன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா முழு வதும் வளர்கிறது. பனை மரங்கள் சூழ அழகுடன் மிளிறும் கோயில்களின் நகரம் என்று பொருள்படும் அங்கோர்வாட் கம்போடியாவி லுள்ள ஒரு கோவில் வளாகமாகும். சுமார் 620 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோயில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. பனை மரம் கம்போடி யாவின் தேசிய மரம் என்றாலும் நமது மாநில மரமாகும். நமது நாட்டில் சுமார் 8 கோடி மரங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பனையில் பலவகை உண்டு. பனை மரம் ‘பாமே’ என்கிற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒரு ஏக்கரில் குறைந்தது ஆயிரம் பனை மரத்தை வளர்க்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருப்பதாக வும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நமது மாநிலத்தின் அடையாளம்!
நமது மக்களின் வாழ்வோடும், பொருளாதாரத்தோடும் இரண்டறக் கலந்திருக்கும் பனை மரத்தை தற்போது அறிந்த வர்கள் வெகு சிலரே. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருது நகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி என்று தென் மாவட்டங்க ளில் பனை மரங்கள் 50 விழுக்காடு உள்ளது. மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஒன்றுபட்ட வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்க ளில் 40 விழுக்காடும், இதர மாவட்டங்களில் 10 விழுக்காடும் பனை மரம் உள்ளது. இந்த மரங்கள் கிராமங்களின் வயலோ ரங்களிலும், தரிசு நிலங்களில் மண்டி கிடப்பதை இப்போதும் பார்க்க முடியும்.
ஒரு மாவட்டத்தின் சின்னம்!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பாலக்காடு பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள பெரும் பான்மையான மக்களின் வாழ்வாதாரம் பனை மரத்தைச் சார்ந்தே உள்ளது. இதனால் அது ‘பனை மரங்களின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தின் சின்னமாக வும் பனை மரம் விளங்குகிறது.
ஒவ்வொன்றும் ஒரு வகை...
கிளைகள் ஏதுமின்றி வளரும் இந்த மரங்கள் 10 ஆண்டு களுக்கு பின்னர் 25 மீட்டர் முதல் 30 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. அதன் தண்டுவடப்பகுதி ஒரு மீட்டர் வரை விட்டம் கொண்டிருக்கும். பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் பாளை வரும், பூ பூக்கும். அப்போதுதான் ஆண், பெண் மரம் எது என்பதை தெரிந்து கொள்ள முடியும். பனை மரத்தின் வயது மனிதனின் சராசரி வயதை விட அதிகமாகும். ஆண் பனை, பெண் பனை, கூந்தப் பனை, தாளிப் பனை, குமுதிப்பனை, சாற்றுப் பனை, ஈச்சம் பனை, சீமைப் பனை, ஆதம் பனை, திப்பிலிப்பனை, கிச்சிலிப் பனை, குடைப்பனை, இளம் பனை, கூறைப்பனை, இடுக்குப் பனை, காந்தம் பனை, பாக்கு பனை, ஈரம் பனை, சீனப் பனை, குண்டு பனை, இளம் பனை, கொண்டைப் பனை, ஏரி லைப் பனை, காட்டுப் பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப் பனை, நிலப் பனை, சனம் பனை என்று பல்வேறு வகைகள் உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும் ஆண் பனையை அழகுப் பனை என்றும் கூறுவார்கள். ஆண் பனையில் குரும்பை தோன்றுவதில்லை. இதனால் நுங்கும் பணம் பழ மும் கிடைக்காது. பாளையை சீவி பதநீர் இறக்கலாம். இனவிருத்திக்கு ஆண் பனை அவசியம். பெண் பனையில் பதநீர் இறக்காமல் இருந்தால் நுங்கு கிடைக்கும்.
மானுடத்திற்கு குடையாய்...
நுனி முதல் வேர் வரை பயனளிக்கும் பனை இன்று வரைக்கும் சமூகப் பொருளாதார வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்படுகின்றன. குறிப்பாக நுங்கு, பனம்பழம் தருகிறது. பனங்கொட்டை கிழங்காக மாறி உண வாக பயன்படுகிறது. குருத்தோலை தோரணம் கட்டவும், அழகிய பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை கூடை, பெட்டி, பாய், கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும் நார் எடுக்கவும், காய்ந்த நிலையில் எரிபொரு ளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பனைமரத்தின் உச்சிப்பகுதி மரத் தொட்டி செய்ய உதவுகிறது. தரை தேய்க்கவும், பிரஷ் செய்யும் பயன்படுகிறது. நடு மரம் உத்திரம் செய்ய உதவுகிறது. பதநீரை கொதிக்க வைத்து கருப்பட்டி, பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கொதிக்க வைத்து வரும் பாகை, மண்பானையில் வைத்து மண்ணுக்குள் மூடி வைத்து மூன்று மாதம் ஆறு மாதம் கழித்து எடுத்தால் கற்கண்டும், மொலா சஸ் என்னும் திரவமும் கிடைக்கிறது. கிலுகிலுப்பை, விசிறி என்று பல விதமான கைவினைப் பொருட்கள் பனை ஓலையில் தயார் செய்யப்படுகிறது. இப்படியாக 500க்கும் மேற்பட்ட பொருட்கள் நமக்கு பயன ளிக்கும் வகையில் கிடைக்கின்றன. இவை குடிசை மற்றும் சிறு தொழில்களாகவும் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் விற்பனை கூட்டு றவு சங்கம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 95 உறுப்பினர்களை கொண்ட கூட்டு றவு சங்கம் 1934 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்களை பனைத் தொழிலாளர்கள் மூலம் நேரடி விற்ப னையாக தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பெரும் பகுதி மக்களுக்கு பொருளாதாரமும் வாழ்க்கைக்கான உத்தரவாதம் கிடைக்கிறது.
பாதுகாப்பு அரண்...
பனை மரத்தின் வேர்கள் அடர்த்தியும், உறுதியும் கொண்டவை. மண்ணுக்குள் நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று வலைக் குவியல் போல சேர்ந்து மண்ணை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும். இதனால் எவ்வளவுதான் மழை பெய்தாலும், நீரோட்டம் பெருக்கெடுத்தாலும் கரைகள் உடையாமல் உறுதி யாக இருக்கும். ஆற்றோரம், குளத்தோரம், ஏரியோரங்களில் வளர்க்கப்படும் பனை மரங்கள் வெள்ளம் ஊருக்குள் வரா மல் தடுக்கிறது. கிராமங்களில் ஊருக்கு வெளியில் உள்ள பனை மரத்தை காவல் மரமாக கருதினர். ஏனென்றால் இயற்கையின் வழியாக வரும் ஆபத்துகளில் இருந்து பனைமரம் காத்து வருகிறது. பல கிராமங்களுக்கு இடி தாங்கியாகவும் பனைமரம் விளங்கி வரு கிறது. ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடப்பட்டு அவைகளை பராமரிப்பது அவசியமான ஒன்று. வறட்சி, கருவேலமரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை வேகமாக அழிந்து வருகின்றது. தற்காலத்தில் பனையின் வகைகள் மிகவும் சுருங்கிவிட்டன. தமிழகத்திலுள்ள 12,500 ஊராட்சி களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2000 முதல் 5000 வரை பனை விதைகளை வழங்கி, அவற்றை விதைத்து பாதுகாப்பாக வளர்ப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அத்துடன் பனை மரம் ஏறுவதற்கு எந்திரங்களை மக்களி டம் கொண்டு செல்ல வேண்டும். இல்லை எனில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில மரம் எங்கே என்று நாம் தேட வேண்டிய சூழல் உருவாகி விடும். எனவே, பனை மரத்தை பாது காப்போம் நமது அடையாளத்தை போற்றுவோம்!
தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு