தருண் மொட்டை மாடியிலிருந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். பட்டம் மேலே எழுந்து சற்று காற்றில் நீந்தும். பிறகு தலைகீழாக பறந்து கீழே இறங்கும். தருண் லாவகமாக நூலை விட்டுவிட்டு இழுத்தான். தற்போது காற்று மெதுவாக வீச மெல்ல பட்டம் காற்றில் தவழ ஆரம்பித்தது. மெதுவாக காற்றின் வேகம் அதிகரித்தது. பட்டம் காற்றில் தத்தி தத்தி நீந்தி பறக்க ஆரம்பித்தது. தருண் இப்பொழுதுதான் மகிழ்ந்தான். அவன் மனசு லேசானது. திடீரென்று ஒரு வண்ணப் பறவையாக அவன் கண்ணுக்கு தெரிந்தது. காற்றில் தாவி தாவி பறந்தது. இவனும் அந்த பறவையோடு பறந்தான்.
அப்பொழுதுதான் எதிர் வீட்டு சுவேதா வெளியே வந்தாள். தருண் பட்டம் விடுவதைப் பார்த்து மகிழ்ந்தாள். தானும் பட்டம் விடவேண்டுமென ஆவல் கொண்டாள்.அவனோடு போய் சேர்ந்து நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் எனக்கு பட்டம் கொடு என்றாள்.அவன் பட்டம் விடுவதிலே குறியாக இருந்தான். எனக்கு கொஞ்சம் நேரம் பட்டம் கொடு தருண் என் உரிமையோடு மீண்டும் கேட்டாள் சுவேதா. அவன் ஒன்றும் சொல்லாமல் பட்டத்தைக்கொடுத்தான்.
பட்டத்தின் நூலை இவள் பிடித்து இழுத்து இழுத்து விட்டாள்.பட்டம் காற்றில் எக்கி எக்கி நீந்தியது. இப்பொழுது இருவரும் மகிழ்ந்தனர். சற்று நேரத்தில் இருவரும் மாறி மாறி பட்டம் விட்டுக்கொண்டார்கள். இருவரும் தனது இடது கைகளை ஒன்றாக இணைத்து கைகளை பட்டத்திற்கு போய்வா! என்றபடி ஆட்டிக்கொண்டே இருந்தனர்.
அப்பொழுது இரண்டு பறவைகள் ஜோடியாக அந்த பட்டத்தின் அருகே பறந்து சென்றன. சுவேதாவிற்கு தங்களது பட்டம் தனியாக பறப்பது பிடிக்கவில்லை. இந்த பட்டமும் அந்த பறவைகள் போல ஜோடியாக பறந்தால் அழகாக இருக்கும் என்று நினைத்தாள்.உடனே தருணிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு தனது அப்பாவை நோக்கிச் சென்றாள்.
அப்பா! அப்பா! எனக்கு ஒரு பட்டம் வேண்டும்ப்பா !. அதுவும் தருண் பட்டம் போலவே வேண்டும்பா! என்று அடம்பிடித்தாள். அடம் பிடித்தால் விட மாட்டாள் என்பது அவளது அப்பாவிற்கு நன்றாக தெரியும்.
சரி!சரி! நானும் இப்ப கடப்பக்கம்தான் போகிறேன்; கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்றார்.
சற்று நேரத்தில் ஒரு புதிய பட்டத்தோடு வந்தார்.அதில் கயிற்றை கட்டி சுவேதாவிடம் கொடுத்தார். அந்த பட்டத்தை எடுத்துக் கொண்டு தருணிடம் ஓடினாள். அவனிடம் பட்டத்தைக் காட்டி மகிழ்ந்தாள்.இந்த பட்டமும் காற்றில் பறக்க ஆரம்பித்தது.பட்டம் காற்றில் தாவி தாவி ஏறியது. தருனும் பட்டத்தின் நூலைப்பிடித்து உதவி செய்தான்.
சுவேதாவின் பட்டம் தருணின் பட்டத்தை நெருங்கி விட்டது இப்பொழுது இரண்டு பட்டமும் இணையாக காற்றில் நீந்தி நீந்தி பறந்தன. சுவேதாவிற்கு இப்பொழுதுதான் மனசிற்கு நிம்மதியாக இருந்தது. இருவரும் மகிழ்ந்து பட்டத்தை இணையாக பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர். பட்டம் இப்பொழுது இவர்களுக்கு பறவையாக தெரிந்தது. இரண்டு ஜோடி பறவைகள் காற்றில் இணையாக பறந்தன. இரண்டும் அவ்வப்பொழுது முட்டி மோதின, பின்னர் விலகின. இது ஏதோ ஒரு விளையாட்டு போல இவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இருவரும் இணைந்து துள்ளிக் குதித்தனர்.
திடீரென இருவரும் பட்டத்தின் நூலை விட்டு விட்டார்கள். கைதட்டி மகிழ்ந்தார்கள்.
அப்பொழுதுதான் சுவேதாவின் அப்பா மேலே வந்தார். பட்டம் எங்கே! என்று வேகமாக கேட்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அதுவாக பறக்க ஆரம்பித்து விட்டது! அதாம் விட்டுட்டோம்! என்றபடி இருவரும் கீழே இறங்கி ஓடினார்கள்.
சுவேதாவின் அப்பா ஒருகணம் திகைத்தார். பிறகு பிள்ளைகளின் மனம் புரிந்தவராய் மெல்ல மகிழ்ந்தபடியே மொட்டை மாடியிலிருந்து வானத்தை நோக்கினார்.