காட்டுப் பன்றி, முயல்களை வேட்டையாடி டிக்-டாக் வெளியிட்டவர்கள் கைது
இராஜபாளையம், ஜூன் 5 இராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதியில் முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதியில் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் முயல் மற்றும் காட்டு பன்றிகள் உள்ளன. இவற்றை நாய்கள் உதவியுடன் வேட்டையாடி சித்திரவதை செய்து டிக்-டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இராஜபாளையம் வனத்துறை சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை காவலர்கள் குடல்புரிநத்தம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கிருந்த தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் சிவா என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்பு, அவர் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில், காட்டுப் பன்றிகளை நாய்கள் மூலம் தாக்குவ தும், இரவு நேரத்தில் ஒளிவிளக்கு மூலம் முயல்களை வேட்டையாடி பதிவிட்டு இருப்பதும் தெரிய வந்தது.
கட்டிடத் தொழிலாளி படுகொலை
இராஜபாளையம், ஜூன்.5- இராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ளது தளவாய்புரம். இங்குள்ள மாஞ்சோலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து. இவர் மனைவி மற்றும் இரு மகளுடன் வசித்து வருகிறார். இசக்கிமுத்து வழக்கம் போல வியாழக்கிழமை கட்டிட வேலைக்கு சென்று ள்ளார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அருகிலிருந்த கண்மாய் பகுதியில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்த வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று
விருதுநகர், ஜூன்.5- சென்னையிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது கலிங்கமேட்டுப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த 28 வயது ஆண் மற்றும் அவரது 23 வயது மனைவி ஆகியோர் கடந்த ஜூன் 2 ல் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். இவர்களிடம் சுகாதாரத்துறையினர் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.