tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை  முறையாக நடத்த பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி, ஜுன் 9-  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வருவாய் வட்டம், முசிரியம் ஊராட்சிக்குட்பட்ட திட்டாணி முட்டம் கிராமத்தில் ஸ்ரீ கூத்தையனார் கோவில் உள்ளது. ஊருக்கு பொதுவான இக்கோவில் நிர்வாகத்தில் பட்டியலின மக்களும்   பங்கேற்க, தொடர்ச்சியாக 5 ஆண்டு காலமாக பட்டியலின மக்களால்   கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.  ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேரந்தவர்கள், இக்கோரிக்கையை மறுத்து வந்தனர். இந்நிலையில் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பூசைகள் திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்தது. இந்நிலையில், காலையிலிருந்து பட்டியலின மக்கள் கோவில் முன்பு கூடத் தொடங்கினர்.  கிராம கோவிலின் நிர்வாகத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த பிரச்சனை தீரும் வரையில் கோவிலை விட்டு அகல்வதில்லை என்று நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு அமர்ந்தும் கோவிலைச் சுற்றி நின்று கொண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர், கூத்தாநல்லூர் வருவாய் வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோருக்கும் போராட்டக்காரர்களால் தகவல்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, கொரடாச்சேரி கூத்தாநல்லூர் காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், வருவாய் வட்டாட்சியர் எஸ். வசுமதி திட்டாணிமூட்டம் கிராமத்திற்கு வந்து, கோவில் முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ஏ. சிவக்குமார், தனி வருவாய் வட்டாட்சியர் எம். நக்கீரன், துணை வட்டாட்சியர் ப. ஜோதிபாசு உள்ளிட்ட  வருவாய் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  கோவில் நிர்வாகத்தில் சம பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பட்டியலின் மக்கள் சார்பாக, கிராமத் தலைவர் ஆர். செல்வராஜ், கிராமச் செயலாளர் எம். சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே. சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.லோகநாதன், கட்சிக் கிளைச் செயலாளர் கே. ஜெயபால் ஆகியோரும், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினைச் சார்ந்த அமைப்பின் செயலாளர் கே. கோவிந்தராஜ், தலைவர் ஆர். மதியழகன், எம். சாமிநாதன், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.  பேச்சு வார்த்தையின் முடிவில், கூத்தாநல்லூர் வருவாய் வட்டாட்சியர் எஸ். வசுமதி, ஜுன் 12 (வியாழக்கிழமை) அன்று, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரையில் அமைதிக்க காக்க வேண்டும் எனவும்   அறிவித்தார். அதன் அடிப்படையில், திட்டாணி முட்டம் கிராமத்தின் பட்டியலின மக்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கம்

அமைப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வி.குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பிரேமா மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கத்தின் முடிவாக, மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.

காலமானார் 

மன்னார்குடி, ஜுன் 9-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே. முனியாண்டியின் புதல்வர் எம். இளவரசன், உடல் நலக் குறைவினால் காலமானார். அவருக்கு வயது 35.  நீண்ட காலம் உடல் நலன் குன்றியிருந்த அவர், சிகிச்சைகள் பலனின்றி நீடாமங்கலத்தில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார்.  அவருக்கு மேரி என்ற மனைவியும், இரண்டு வயது மகனும் உள்ளனர். தகவல் அறிந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். ராதா, பி. கந்தசாமி மற்றும் வி.எஸ். கலியபெருமாள், ஜான் கென்னடி, அண்ணாதுரை, காளியப்பன், ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மறைந்த எம். இளவரசனின் இறுதி நிகழ்ச்சி திங்கட்கிழமை மதியம் நீடாமங்கலத்தில் நடைபெற்றது.

தட்டச்சு தேர்வு முறையை மாற்றும்  அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், ஜுன் 9-   தட்டச்சு தேர்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவர் அ.சிவகுமார் தலைமையில், செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தட்டச்சுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 4 ஆயிரத்து 312 தட்டச்சுப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் மாணவ, மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், மனித வள மேம்பாட்டுத் துறை, தமிழ் இணையவழித் துறை, தகவல் துறை ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, வணிகவியல் தேர்வுகள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு கணினியில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தட்டச்சுப் பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு, துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதுள்ள முறையிலேயே தட்டச்சுத் தேர்வுகளை நடத்த வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மூலம் தட்டச்சுத் தேர்வு தொடர்ந்து நடத்த வேண்டும். அரசாணை எண் 187-ஐ ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.