சென்னை, நவ. 18 - நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இணைய வெளியானது மனித குலத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்தாலும் அதற்கு இணையான சவால்களும் அதி கரித்துக் கொண்டே வருகிறது. அதாவது இந்த டிஜிட்டல் உலகில் கம்ப்யூட்டர், இணையம், இன்டர்நெட், மொபைல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவற்றுள் ஊடுருவி தகவல் களை திருடுவது, அழிப்பது. ஏடிஎம், டெபிட் கார்ட், கிரெடிட் கார்டுகளை மையமாக கொண்டு பொது மக்களின் பணத்தை குறி வைத்து நடக்கும் நூதன மோசடிகள் என ‘சைபர் குற்றங்கள்’ அதிகரித்து விட்டன. குறிப்பாக, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை அனைத்து வங்கி களும் இணைய வழி மூலம் இணைத்திருப்பது சைபர் குற்றங்கள் பெருக முக்கிய காரண மாக அமைந்திருக்கிறது.
கவர்ச்சிகரமான ஏமாற்றம்!
பஜாஜ் பைனான்ஸ், ஆர்பிஎல், கோடக் மகேந்திரா, லட்சுமி விலாஸ் என்று 15க்கும் மேற்பட்ட தனியார் வங்கி நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவை மையங் களில் வாடிக்கையாளர்கள் விபரங்களை ரகசியமாக வாங்கிக் கொள்ளும் மர்ம கும்பல், அதன் பிறகு கவர்ச்சி வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. அதன் பிறகு செல்போனில் உள்ளே புகுந்து, அதை வைத்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அள்ளி விடுகிறது. இந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு முடிய பொது மக்களின் பணம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மர்ம கும்பல்களால் சுருட்டப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி பேர்வழிகளால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் மக்கள் பணம் திருடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியே வேதனை தெரிவித்திருக்கிறது. இது மாதிரியான சைபர் குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளது. அதுவே மூன்றாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து 15 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2021-2022 ஆண்டுகளில் 17 மாதங்களில் மட்டும் சுமார் 63,000 புகார்களை பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இவற்றில் அதிகபட்சமாக 12,500 மோசடி புகார் ஏடிஎம் அட்டைகள், வங்கி பரிவர்த்த னைகள். செல்போன் அழைப்பு மோசடி 6,670, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி 6,200, வலைதள பாலியல் ரீதியான குற்றங்கள் 2,820, மற்ற சமூக வலைதள குற்றங்கள் 2,623 ஆகும்.
விரியும் வலை- சிக்கும் மக்கள்
முக்கியமாக கொரோனா காலக்கட்டம் தான் சைபர் குற்றங்களை அதிகரித்தது என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருந்தார்கள். இவர்களை குறி வைத்து இன்டர்நெட் வழியாக பணத்தை பறிக்கும் செயல்களை தொழில்நுட்பம் தெரிந்த கிரிமினல்கள் செய்ய ஆரம்பித்தனர். அடுத்ததாக, வங்கிக் கடன், பிரபல நிறுவனங்களில் வேலை, பரிசுப் பொருள், போனஸ் தொகை வந்திருக்கிறது என்றெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பியும், இமெயில் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தும் ஏமாற்று வித்தைகளை மேற்கொண்டனர். உங்கள் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் (முடக்கப்படும்); ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க முடியாது;
மொபைல் டி ஆக்டிவேட் (செயலிழந்து விடும்), இனிமேல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என பயமுறுத்தி அடுத்த கட்ட ஆட்டங்களில் ஈடுபட்டனர். இப்போது, ஜிபேயில் பத்தாயிரம் ரூபாய் தவறுதலாக அனுப்பியதாக ஏமாற்ற ஆரம்பித்துள்ளனர். போலி கடன் செயலிகள் மூலம் குறைந்த பணம் கொடுத்து, பின் அதிகமாக கேட்டு மிரட்டுதல், அமேசான், ஓலா, ஊபர் என்று அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் (ஆஃப்) வழியாக ஊடுருவி அதன் மூலம் நட்பு ஏற்படுத்தி பணத்தைப் பறித்தல் என்று மோசடி வலையை புதிது புதிதாக விரித்துக் கொண்டே வருகின்றனர். இந்த வகையான குற்றங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் மட்டும் நாடு முழுக்க 86 விழுக்காடு அதிகரித்தது என்று காவல் துறையே தெரிவித்திருக்கிறது. உண்மையிலேயே இந்த புள்ளி விபரங்கள் மிக மிக குறைவுதான். இதைவிட பல மடங்கு இன்டர்நெட் தொடர்பான குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் தினம் தினம் நடந்து வருகின்றன.ஆனாலும் அவைகள் காவல்துறைக்கு போகாமல் சமாதானம் பேசியும் முடக்கப்படு கின்றன. காவல்துறைக்கு தகவல் போனாலும் அங்கும் ஒரு சில காவலர்கள், பாதிக்கப்பட்ட வரை பயமுறுத்தியும் குழப்பம் செய்தும் புகாரை பதிவு செய்ய விடாமல் திருப்பி அனுப்புவதும் உண்டு. கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கும் மனைவிக்குத் தெரியாமல் கணவனுக்கும் வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக படத்தை மார்பிங் செய்து லிங்க் அனுப்புவது. மகன், மகள், மனைவி, தங்கைகளின் படத்தை ‘மார்பிங்’ செய்து அரை நிர்வாணமாக அனுப்பி மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டிப் போகும் விவகாரங்களை தான் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையாக (எஃப் ஐ ஆர்) பதிவு செய்கிறார்கள்.
என்ன செய்கிறது காவல்துறை?
தமிழ்நாட்டில் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறோம். இருப்பி னும் இணையத்தை பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்கிறது காவல்துறை. சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புத்தகத்தில், “கேஒய்சி விபரங்களை இரண்டு நாட்களுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி அந்த லிங்கை ஓபன் செய்ததால் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது எப்படி” என்பதை பட விளக்கத்துடன் விவரித்திருக்கிறது.
எத்தனை எத்தனை மோசடிகள்!
அது மட்டுமல்ல, இணைப்பு மூலம் மோசடி (link Scam), மின் கட்டண மோசடி (Eb Bill Fraud), பான், ஆதார் கேஒய்சி புதுப்பித்தல் மோசடி (Remote Control App), கடன் செயலிகள் (Loan Application Fraud), அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி(Boss Scam); சிம்கார்டு துண்டிப்பு மோசடி (Sim Blocking Fraud), அமேசான் பிளிப்கார்ட் பகுதி நேர வேலை மோசடி (Part Time Job Offer), வீடியோ கால் அழைப்பு மூலம் பணம் பறிப்பு மோசடி (Sextortion), கிரிப்டோ கரன்சியின் முதலீடு மோசடி (Investment through Cryptocurrency) , வெளிநாட்டுக்கு ஆயில் மற்றும் கொட்டைகள் ஏற்றுமதி மோசடி (Oil and Seed Export Fraud); இணையதள சந்தை மோசடி (Online-OLX Market Scam), சிம் ஸ்வாப், சிம் குளோனிங் மோசடி(Sim swap, Sim Closing), க்யூ ஆர் குறியீடு ஸ்கேன் மோசடி(QR Code Scam), இணையதள சேவை வேலை வாய்ப்பு மோசடி (Online Job offer Fraud), வீடு வாடகைக்கு விடும் வலைதளங்களின் மூலம் மோசடி (Fraud using House Rent Application);
தீங்கிழைக்கும் செயல்களை பயன்படுத்தி மோசடி நிறுவனங்களின் ஈமெயில் சமரசம் மூலம் மோசடி (Business Email Com promise), பரிசு தருவதாக கூறி மோசடி (Gift Scam), திருமண வரன் வலைதளம் வாயிலாக மோசடி (Matrimony Fraud), இணைய வழி பங்கு சந்தை முதலீடு மோசடி (Online Stock Investment Scam), மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடிகள் (MLM); சமூக ஊடகங்கள் மூலம் ஆள் மாறாட்டம் (Impersonation through Social Media), இணையதள லாட்டரி மோசடி (Online lottery fraud), வெளிநாட்டு தொண்டு நிறுவன நிதி வழங்கல் தொடர்பான மோசடி, கடன் அட்டை வரம்பு மேம்படுத்துதல் மோசடி (Credit limit Upgradation Fraud), பணம் திரும்ப பெரும் கேஷ் பேக் சலுகை மோசடி(Online Ford using Cash back offers); சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புதல் (Spreading False News in Social Media), தரவு திருட்டு (Data theft), தேடுபொறிகளில் தகவல்களை மாற்றி யமைத்து மோசடி (Fraud by Compromising Credentials through Search Engines), அங்கீ கரிக்கப்படாத கடன் செயலிகள் ( Unauthorized Seed loan Application), தவறான க்யூ ஆர் குறியீடுகளுடன் வியாபார கடன்களில் மோசடி (Payment Spoofing Applications) -இப்படியாக 30 வழிமுறைகளில் சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து முழுக்க முழுக்க படங்களுடன் எளிய முறையில் புரிந்து கொள்ள”முத்துவும் முப்பது திருடர்களும்” என்கிற 60 பக்கங்களைக் கொண்ட சிறு நூலில், குற்ற செயல்முறைகள் குறித்து மிக சுருக்கமாக சென்னை பெருநகரக் காவல்துறை சொல்லப்பட்டிருக்கிறது.
72 மணி நேரத்திற்குள்
சைபர் குற்றம் நடந்த 72 மணி நேரத்துக்குள் இணையதளம் அல்லது 1930, 155260 என்கிற எண்களில் தகவல் கொடுத்தால் துரிதமாக நடவடிக்கை எடுத்து உங்களிடம் மோசடி செய்தவர் வங்கிக் கணக்கு கள் முடக்கப்படும். இழந்த பணத்தை மீண்டும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் இது, பணத்தை இழந்த எல்லோருக்கும் பலன் தரவில்லை. ஏழு மாதங்களுக்கு முன்பு (10.3.2022) ஓலா செயலி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் பேச முயற்சித்த போது அதனுள் புகுந்த மர்ம நபரால் இந்த செய்தியாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16,059 திரு டப்பட்டது. எப்படி திருடப்பட்டது என்கிற வங்கி யின் அறிக்கையுடன் (பேங்க் ஸ்டேட்மெண்ட்) அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் காவல் நிலையம், சைபர் குற்றப்பிரிவு போலீசார், இணையதளத்தில் புகார் அளித்தும் பல மாதங்கள் அலைந்தது தான் மிச்சம். இதுபோன்ற அனுபவம் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உள்ளது. இன்றைய உலகில் மிகப் பெரும்பான்மை யானோர் ஆன்லைன் சேவைகளை பயன் படுத்துகின்றனர். அதன் மூலமே பணம் திருடு வது பிரதான தொழிலாக ஈடுபட்டு வரு கின்றன மோசடி கும்பல்கள். படித்தவர்கள் முதல் அனைவரும் இதற்கு இலக்காகி வருகின்றனர். இந்த மோசடி கும்பல்கள் உத்தரகண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாம்களை அமைத்து தினம் தினம் புதுமை யான வடிவங்களை புகுத்தி பிரத்யோக பயிற்சிகள் கொடுத்து ஒட்டுமொத்த காவல்துறைக்கும் சவால்விடும் மோசடிக் கும்பல்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் காவல்துறை, சைபர் கிரைம் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
- தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு