10, 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பாபநாசம், மே 20- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த மாணவர்கள் பத்து, பன்னிரெண்டு அரசு பொதுத் தேர்வில் சாதித்துள்ளனர். பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 10, 12 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான பாராட்டு விழா பட்டுக்குடி சமுதாயக் கூடத்தில் நடந்தது. இதில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அய்யம்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் 579 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற தீபிகா, கணபதி அக்ரஹாரம் மணி மெட்ரிகுலேசன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற தேவிகா, ஆடுதுறை வித்யாஸ்ரம் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற யோகஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.1000 பண பரிசும், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லாததால், போக்குவரத்து கழக பொதுமேலாளர் வரை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஊராட்சியில் தரமான சாலை வசதியும் இல்லை. இனியாவது அரசின் கவனம் தங்களது கிராமத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்பது பட்டுக்குடி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.