மதுரை:
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற சிறை செல்லவும் தயார் என தமிழ்நாடு அரசு ஊழியர சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் மதுரையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியது:-
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மூன்றரை லட்சம் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி நான்கு கட்டப் போராட்டங்களை அரசு ஊழியர் சங்கம் நடத்தவுள்ளது.'
புதிய ஓய்வூதியத் திட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டபோதே அதை அரசு ஊழியர்கள் எதிர்த்தனர். ஆனால், அரசு ஆயிரம் சமாதானங்களைக் கூறியது:
ஆனால் தற்போது நடப்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) இப்போது பங்களிப்பு செட்டில்மெண்ட் திட்டம் Contributary Settlement Scheme- ஆக மாறியுள்ளது. இனிமேல் பென்ஷன் கேட்கமாட்டேன் என்று இருபது ரூபாய் பத்திரத்தில் எழுதிக்கொடுத்து தான் கட்டிய பணம், அரசாங்கத்தின் பங்களிப்பு இவற்றுடன் வட்டியும் சேரத்து ஒரே முறை செட்டில்மெண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதை எந்த அரசு ஊழியரும் வேடிக்கை பார்க்க தயாரில்லை என்றார்.
கடந்த இரண்டாண்டுகளாக கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி பல முறை அமைச்சர்களை சந்தித்துவிட்டோம். ஆனால் தமிழக முதல்வர் எங்களை அழைத்துப் பேச மறுக்கிறார். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2021 ஜனவரி 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பிரச்சாரம். ஜனவரி 19-20 ஆகிய தேதிகளில் மண்டல அளவில் போராட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெறுகிறது. ஜனவரி 27-ஆம் தேதி மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரையில் நடைபெறுறிது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் நடத்தி சிறைகளை நிரப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.